மும்பையில் கடந்த 48 மணி நேரத்தில் 278 காவலர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மகாராஷ்டிர காவல்துறை தெரிவித்துள்ளது.
நாட்டிலேயே கோவிட்-19 நோய்த் தொற்று மகாராஷ்டிராவில்தான் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் 41,642 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 11,726 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,454 பேர் பலியாகியுள்ளனர்.
மும்பையில் கடந்த 48 மணிநேரத்தில் 278 காவலர்களுக்கு கோவிட்-19 நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர காவல்துறை தெரிவித்துள்ளது. இதனை அடுத்து மகாராஷ்டிராவில் கரோனா பாதிக்கப்பட்டுள்ள காவல் பணியாளர்களின் எண்ணிக்கை 1,666 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலத்தில் கோவிட் பாதிப்பிலிருந்து 473 காவலர்கள் மீண்டுவந்துள்ளனர். எனினும் இந்நோய்க்கு இதுவரை இங்கு 16 காவலர்கள் உயிரிழந்துள்ளனர்.