கரோனா; பாதிப்பு எண்ணிக்கை 27,892 ஆக அதிகரிப்பு; பலி 872 ஆக உயர்வு

By செய்திப்பிரிவு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 1,396 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 3-ம் தேதி வரை ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேசமயம் பரவும் வேகம் குறைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கரோனா பரவுதல் குறைந்து வருகிறது. சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோர் சதவீதம் அதிகரித்து வருகிறது. 6,815 நபர்கள் இது வரை குணமடைந்துள்ளனர். 21.90 சதவீதம் குணமாகும் சதவீதமாக உள்ளது.

இந்தியா முழுவதும் இன்று (ஏப்ரல் 27) காலை 9:00 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 1,396 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.

கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 27,892 ஆக அதிகரித்துள்ளது. 872 பேர் பலியாகி உள்ளனர். 20,835 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6,815 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE