கோட்டாவில் இருந்து அழைத்து வரப்பட்ட 391 அசாம் மாணவர்கள்: 14 நாட்கள் தனிமைப்படுத்த முடிவு

By செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கால் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் சிக்கித் தவித்த 391 அசாம் மாணவர்கள் பேருந்துகள் மூலம் சொந்த ஊருக்கு அழைத்து வரப்பட்டனர்.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.

இதனால் ராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டா நகரத்தில் தங்கி பயிற்சி மையங்களில் படித்துவரும் சுமார் 7000 மாணவர்கள் சிக்கிக் கொண்டனர். இவர்கள் அனைவரும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களில் உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் பேருந்துகளை அனுப்பி பத்திரமாக மீட்டு வந்தது.

கோட்டாவில் சிக்கிய மாணவர்களில் மகராஷ்டிரா உட்பட பல்வேறு மாநில மாணவர்களும் உள்ளனர். அவர்கள் அனைவரும் பயிற்சி மையங்கள் உள்ள பகுதியில் தங்கியுள்ளனர். அவர்கள் போதிய உணவு உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் தவிப்பதாக தகவல் வந்துள்ளது.

இதையடுத்து மகாராஷ்டிரா, பிஹார் என பல மாநில அரசுகளும் கோட்டாவில் தங்கியுள்ள மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்தவகையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களும் கோட்டாவில் சிக்கியுள்ளனர். அவர்களில் முதல்கட்டமாக 391 மாணவர்கள் மீட்கப்பட்டனர். அசாமில் இருந்து பேருந்து அனுப்பப்பட்டு அவர்கள் அனைவரும் அழைத்து வரப்பட்டுள்ளனர். 391 மாணவர்களும் நேற்று இரவு பேருந்துகளில் குஹாத்தி வந்து சேர்ந்தனர். அவர்களை மாநில அமைச்சர் ஹிமானந்த சர்மா மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அவர்கள் அனைவரும் அவர்களும் வீடுகளுக்கு அனுப்பவில்லை.

அதற்கு மாறாக 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் முடிந்து அவர்களுக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE