பொருளாதாரத்தை முடக்கிவிட்டு ஊரடங்கை எப்படி அமல்படுத்த முடியும்? - கபில் சிபல் கேள்வி

பொருளாதாரத்தை முடக்கி வைத்து விட்டு மக்களை எப்படி வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்க வைக்க முடியும் என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் கரோனா ஒழிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகளும் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றன.

இந்த நிலையில் கரோனா வைரஸை நாம் ஒற்றுமையாக சமாளிக்கும்போது, பாஜக தொடர்ந்து வகுப்புவாத தப்பெண்ணம் மற்றும் வெறுப்பு வைரஸை பரப்புகிறது என விமர்சித்து இருந்தார். இதற்கு பாஜக மூத்த தலைவர்கள் கடும் பதிலடி கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் ஒருவருக்கொருவர் கடுமையான வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறியதாவது:

‘‘ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் முன்பாக மாநில அரசுகளை கலந்தாலோசிக்கவில்லை. ஆனால் தற்போது அதனை நீட்டிக்கும் முடிவை மட்டும் மாநில அரசுகளை கேட்டு மத்திய அரசு எடுக்கிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை எப்படி எடுக்கப்பட்டதோ அதேபோல தான் ஊரடங்கு முடிவும் எடுக்கப்பட்டது.

பொருளாதாரத்தை முடக்கி வைத்து விட்டு மக்களை எப்படி வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்க வைக்க முடியும். இது சரியான கொள்கையும் அல்ல.

இதனை விமரசனத்திற்காக சொல்லவில்லை. இருந்தாலும் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்பதால் சொல்கிறோம். அரசு எடுக்கும் நடவடிக்கைளை ஆதரிக்கிறோம். அதேவேளையில் இதனை ஆக்கபூர்வமான விமர்சனமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.’’ எனக் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE