நான்கு பெண் குழந்தைகளுக்குத் தாயான 44 வயது பெண்மணி ஒருவர் மும்பையில் மூளைரத்தக் கசிவு நோயினால் பரிதாபமாக மரணமடைந்தார். இவர் மோசமான உடல் நிலையில் 3 மருத்துவமனைகளுக்கு அழைத்துச் ச்செல்லப்பட்டு எங்குமே அனுமதிக்கப்படவில்லை.
கடைசியில் கே.இ.எம். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட 5 மணி நேரங்களில் சிகிச்சை தாமதமாகி அவர் உயிர் பிரிந்தது.
சையத் ஆர்ஷி என்ற இந்தப் பெண் மும்பை பெஹந்தி பஜார் பகுதிவாசியாவார். இவருக்கு இருதய நோய் இருந்தது. இவர் ஜேஜே மருத்துவமனை, நாயர் மருத்துவமனை , தெரியாமல் ஒரு கோவிட் ஸ்பெஷல் மருத்துவமனை என்று அலைந்துள்ளார்.
மும்பையில் கோவிட்-19 காரணமாக மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் இல்லாமல் பல தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டன.
இவரது சகோதரர் சையத் ஏஜாஜ் கூறும்போது, “புதன் கிழமை அக்காவின் உடல்நிலை மோசமானது, அவரது நாடித்துடிப்பு அதிகமாக இருந்தது, பேச முடியவில்லை. அவர் வீட்டிலிருந்து அழைப்பு வர நாங்கள் சென்று ஜேஜே மருத்துவமனைக்கு காரில் அழைத்துச் சென்றோம். ஆனால் மருத்துவமனை மூடப்பட்டதாக பாதுகாப்பு காவலர் கூறினார். இன்னொரு மருத்துவமனையும் மூடப்பட்டது, நாயர் மருத்துவமனை கோவிட்-19 ஸ்பெஷன் ஹாஸ்பிடல் கடைசியாக கே.இ.எம். மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம்.
கே.இ.எம். மருத்துவமனையில் ஒரேயொரு மருத்துவர்தான் இருந்தார். அவரை விபத்து பிரிவுக்கு ஸ்ட்ரெட்சரில் கொண்டு சென்றனர், 30 நிமிடங்கள் அவரை அக்காவுக்கு அடிப்படை சிகிச்சை கூட அளிக்கவில்லை. பலமுறை கெஞ்சிய பிறகு ட்ரெய்னி டாக்டர் ஒருவர் ஊசி மருந்தைச் செலுத்தினார். பிறகு எமர்ஜென்சி வார்டுக்குக் கொண்டு சென்றனர், என் அக்கா கணவர்தான் அக்கா முகத்தில் பிராணவாயு கவசத்தை மாட்டினார். இரண்டு நர்ஸ்கள் மிகவும் மோசமாக சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
மருத்துவமனையின் நிலையைப் பார்த்து அதிர்ச்சியடைந்தோம். 3-4 மணி நேரங்களில் 15 மரணங்களை வார்டுகளில் பார்த்து விட்டோம்” என்று அதிர்ச்சித் தகவலை தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவித்தார்.
மருத்துவர்கள் பிறகு சிடி ஸ்கேன் எடுக்க வேண்டும் என்றனர், ஆனால் ரிப்போர்ட் 2 மணி நேரம் கழித்து வருவதற்கு முன்னரே அக்கா மதியம் 1.30 மணிக்கு இறந்தே போனார்.
“ஊசி மருந்து செலுத்திய பயிற்சி மருத்துவருக்கு கையெல்லாம் நடுங்கியது. நரம்பை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. கரோனாவினால் 2 பேர் மரணமடைந்தார்கள் என்றால் சிகிச்சை செய்யப்பட முடியாமலேயே 20 பேர் சாகின்றனர்” என்றார் சகோதரர் இஜாஜ்.
-தன்வி தேஷ்பாண்டே. தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ்