டெல்லியில் பிசா டெலிவரி செய்த நபருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் அவருடன் தொடர்பு உள்ளதாக கருதப்படும் 16 பேருக்கு சோதனை நடத்தியதில் அவர்களுக்கு தொற்று ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் மே 3-ம் தேதி வரை ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நடவடிக்கைகளை பாதுகாப்புடன் தொடங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் டெல்லியில் வீடுகளுக்கு பிசா டெலிவரி செய்த இளைஞருக்கு கரோனா தொற்று இருப்பது அண்மையில் உறுதியானது.
இதனால் அந்த நிறுவனத்தில் அவருடன் இணைந்து பணியாற்றிய 16 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களை தனியிடத்தில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்தனர். 16 பேருக்கு கரோனா பரிசோதனையும் நடத்தப்பட்டது. இதில் அவர்களுக்கு தொற்று ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேசமயம் பிசா வழங்கிய நபர் சென்ற 73 வீடுகளையும் போலீஸார் தனிமைப்படுத்தியுள்ளனர். அவர்களுக்கு இன்னமும் பரிசோதனை ஏதும் நடத்தப்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.