தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்கும் ஒடிசா; புதிதாக 7 பேருக்கு கரோனா: பாதிப்பு எண்ணிக்கை 68 ஆக அதிகரிப்பு

ஒடிசா மாநிலத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அம்மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒடிசாவில் கடந்த மார்ச் 16 ஆம் தேதிதான் முதன்முதலாக ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஒடிசாவைப் பொறுத்தவரை கரோனா பாதிப்பு பெரிய அளவுக்கு இல்லை. அங்கு கடந்த ஒரு மாத காலத்தில் 68 பேருக்கு கரோனா பாதித்துள்ளது. இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து உயர் அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை கூறியதாவது:

''மாநிலத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை 951 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுவரை மொத்தம் 10,641 மாதிரிகள் மாநிலத்தில் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

ஒடிசாவில் கோவிட்-19 செயலில் உள்ள பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இப்போது 43. மொத்தம் 24 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். 72 வயதான ஒருவர் வைரஸால் உயிரிழந்தார். புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள ஏழு பேரும் பத்ராக் (ஐந்து) மற்றும் பாலசோர் (இரண்டு) ஆகிய இரு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

இதில் புதிதாக 5 பேருக்கு கரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, பச்தேவ்பூர் மற்றும் பண்டரிபோகாரி தொகுதிகளில் ஐந்து கிராம பஞ்சாயத்துப் பகுதிகளில் பத்ரக் மாவட்ட நிர்வாகம் திங்கள்கிழமை கண்டெய்ன்மென்ட் மண்டலமாக அறிவித்தது. ஐந்து பேரில் மூவர் பசுதேவ்பூர் தொகுதியைச் சேர்ந்தவர்கள். மற்ற இருவரும் பண்டரிபோகாரியைச் சேர்ந்தவர்கள்.

புவனேஸ்வர் உள்ளிட்ட குர்தா மாவட்டத்தில் 46 பேருக்கு கோவிட் -19 பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதைத் தொடர்ந்து பத்ரக்கில் எட்டுப் பேர், பாலசூரில் மூன்று பேர், ஜஜ்பூர், கேந்திரபாரா, சுந்தர்கர் மற்றும் கலஹந்தி ஆகிய இடங்களில் தலா இரண்டு பேர் மற்றும் கட்டாக், தெங்கனல் மற்றும் பூரி ஆகிய இடங்களில் இருந்து தலா இரண்டு பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது''.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE