பெண்கள் வங்கி கணக்கில் நிதி- மத்திய அரசு விளக்கம்

By செய்திப்பிரிவு

ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் நிதி தொடர்பாக வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

கரோனா நிவாரண நிதியாக ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.500 செலுத்தப்படும் என்று மத்திய அரசுஅறிவித்தது. அதன்படி இந்த ஏப்ரல் மாதத்துக்கு ரூ.500 வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, இந்தப் பணத்தை உடனடியாக எடுத்துக் கொள்ளாவிட்டால் அதை அரசு திருப்பி எடுத்துக் கொள்ளும் என்று வதந்தி பரவியது.

இதனால், வங்கிகளில் நிவாரணத் தொகையை எடுக்க ஊரடங்கு நேரத்தில் சமூக விலகலை கடைபிடிக்காமல் பெண்கள் திரண்டனர்.

இதையடுத்து, நிவாரணத் தொகையை உடனடியாக எடுக்காவிட்டால் அதை அரசு எடுத்துக் கொள்ளும் என்ற செய்தி வதந்தி என்றும் அந்தப் பணத்தை வங்கியில் இருந்து பெண்கள் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்றும் இதற்காக வங்கிகளில் கூட்டமாக திரள வேண்டாம் என்றும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் இதேபோல, மே, ஜூன் மாதங்களுக்கும் வங்கிக் கணக்கில் தலா ரூ.500 வீதம் வழங்கப்படும் என்றும் அரசு சார்பில் விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE