கரோனா முன்னெச்சரிக்கை: இந்திய தூதரகங்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு

வெளிநாடுகளில் சிக்கிக் கொண்ட இந்தியர்களை பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்ததில் இந்திய தூதரகங்கள் பெரும் பணியாற்றியுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கை தொடர்பாக மாநில முதல்வர்கள், அரசு அதிகாரிகள், மருத்துவ துறையினர் என பல தரப்பினருடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் வசதி மூலம் உரையாடி வருகிறார்.

காட்சி ஊடக பிரதிநிதிகள், பத்திரிகை ஆசிரியர்கள், ரேடியோ ஜாக்கிகளுடனும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து நாட்டின் முன்னணி சமூக மற்றும் மத அமைப்பினருடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் அவர் காணொலிக் காட்சியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் ‘‘கரோனா வைரஸின் தாக்கம் இருந்தாலும் இதனை வெற்றிகரமாக இந்தியா கையாண்டு வருகிறது. வெளிநாடுகளில் சிக்கிக் கொண்ட இந்தியர்களை பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்ததில் இந்திய தூதரகங்கள் பெரும் பணியாற்றியுள்ளன.

இந்திாவில் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. கரோனா முன்னெச்சரிக்கை மட்டுமல்லாமல் பொருளாதார பங்களிப்பிலும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கு இருக்க வேண்டும். பிரதமரின் கரோனா நிதி குறித்து எடுத்துரைக்க வேண்டும்’’ எனக் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE