21 நாட்கள் ஊரடங்கு: சித்தூரில் காவல்துறையினர் பசியாற்றும் சேவை

21 நாட்கள் ஊரடங்கில், சித்தூரில் காவல்துறையினர் பசியாற்றும் சேவையில் ஈடுபட்டு, பொதுமக்களின் பாராட்டைப் பெற்றனர்.

கரோனா பாதிப்பு காரணமாக ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இம்முறை உகாதி பண்டிகை கொண்டாட்டங்கள் காணப்படவில்லை. சித்தூர் காவல்துறையினர் உகாதி நாளை வித்தியாசமாக விசேஷமானதாக மாற்றியுள்ளனர்.

21 நாட்கள் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டபின், பொது இடங்களில் இருக்கும் ஆதரவற்றோர் மற்றும் வயதானவர்களுக்கு உணவளித்துள்ளார் காவல்துறைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார்.

இந்த யோசனை உதித்தவுடன் தன்னார்வ அமைப்புகள், முதியோர் இல்லங்கள், நல உதவி செய்யும் அமைப்புகள் என அனைவரும் தொடர்பு கொள்ளப்பட்ட இந்த நல்ல காரியத்தில் அவர்களது ஒத்துழைப்பும் கோரப்பட்டது. சித்தூரில் அம்மவோடி ஆசிரமம் மற்றும் இன்னும் சில இளைஞர்கள் சேர்ந்து சாம்பார் சாதம், புளியோதரை, தயிர் சாதம் தயார் செய்து கிட்டத்தட்ட 500 நபர்களுக்கு அளித்துள்ளனர். உகாதி பண்டிகைக்காக வடையும் இனிப்பும் சேர்த்துத் தரப்பட்டன.

சித்தூரின் துணை காவல்துறை கண்காணிப்பாளர் ஈஷ்வர் ரெட்டி, சித்தூர் 2 வட்டத்தின் ஆய்வாளர் யுகாந்தார் ஆகியோர் பேருந்து நிலையத்திலிருந்து இந்த அன்னதானத்தை ஆரம்பித்து வைத்தனர். கடந்த சில நாட்களாகவே பசியிலிருந்த பலரும் இதன் மூலம் பசியாறினர். காவல்துறையின் சேவையைப் பாராட்டினர். புத்தூரிலும் துணை காவல்துறைக் கண்காணிப்பாளர் டி.முரளிதர் தலைமையில் 300 பேருக்கு அன்னதானம் செய்யப்பட்டது.

மேலும் நகரி, கர்வேடி நகரம், நிந்த்ரா மற்றும் சத்யவேடு பகுதிகளிலும் பலருக்கு உணவளிக்கப்பட்டது. ஊரடங்கு தொடர்வதால் இந்தச் சேவையை காவல்துறை தொடர்ந்து செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE