டெல்லியில் உத்தரவுகளையும் மீறி செயல்படும் உடற்பயிற்சி நிலையங்கள்: கரோனா அச்சுறுத்தலுக்கும் அடங்காத ‘ஜிம்’வெறியர்கள்

பொதுஇடங்களில் அதிகம் பேர் கூடக்கூடாது, சமுதாய இடைவெளி அவசியம் போன்ற கரோனா எச்சரிக்கைகளையும் மீறி டெல்லியில் பல உடற்பயிற்சி நிலையங்கள் சொல்பேச்சுகேளாமையினால் திறந்து வைக்கப்பட்டு, பலர் உடற்பயிற்சி செய்து வருகின்றனர்.

‘ஜிம் வெறியர்கள்’ அறிவியலை புறக்கணித்து கரோனா தடுப்பு குறித்த அறிவியலற்ற வதந்திகளையும் போலி அறிவியல் கூற்றுகளையும் நம்பி வருகின்றனர். உதாரணமாக உடலை பயிற்சி மூலம் உஷ்ணமாக வைத்திருந்தால் கரோனா அண்டாது என்பது ஒரு மாயை என்று தெரியாமல் இதனை ஜிம் வெறியர்கள் நம்புகின்றனர். உலகச் சுகாதா அமைப்பு உஷ்ணம் கரோனாவை அழிக்கும் என்பதற்கு எந்த வித அறிவியல் ஆதாரமும் இல்லை என்று ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

ஆனாலும் சமூகப் பொறுப்பின்றி அரசு உத்தரவுகளை மீறி பலர் ஜிம்களை திறந்து வைத்ததால் டெல்லி போலீஸ் இதுவரை 4 ஜிம் உரிமையாளர்கள் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது, 2 உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு ஜிம் உரிமையாளர் ஏ.எஃப்.பி செய்தி ஏஜென்சியிடம் கூறும்போது, பொறுப்பற்ற முறையில், “ஏற்கெனவே பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி ஆகியவற்றால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளோம், ஆகவே இந்த முறை மூட முடியாது” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார், இவரும் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாரிகள் ஆங்காங்கே திறந்திருக்கும் ஜிம்களுக்குச் சென்று கடும் எச்சரிக்கையுடன் மூட வைத்து வருகின்றனர்.

அதாவது பெரிய மாயை என்னவெனில் ‘வைரஸ் இரண்டாம்பட்சம்தான், நான் ஆரோக்கியமாக இருந்தால் எதுவும் நம்மை அண்டாது’ என்ற மிகப்பெரிய ஒரு போலி நம்பிக்கை பரவி வருவதாகவும் மீறி ஜிம்களுக்குச் சென்றால் கைது செய்வோம் என்றும் டெல்லி போலீஸார் எச்சரித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE