குடியுரிமைச் சட்டப் போராட்டத்தில் வன்முறை: சேதங்களுக்கு இழப்பீடு வசூலிக்கக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

டெல்லியில் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதால் போராட்டம் நடத்தியவர்களிடம் இழப்பீட்டுத் தொகையை வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. உ.பி.யில் நடந்த போராட்டத்தின்போது பெரும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.

இந்தநிலையில் பாஜக மூத்த தலைவர் அஸ்வினி குமார் உபாத்யாய் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.என். படேல் மற்றும் ஹரி சங்கர் ஆகியோர் முன்பு ஆஜராகி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில் ‘‘குடியுரிமைச் சட்டத்தை நாடுமுழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. குறிப்பாக டெல்லியில் ஜாமியா நகரில் நடந்த போராட்டத்தில் பெரிய அளவில் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன.

பொதுச் சொத்துக்கள் கொளுத்தப்பட்டுள்ளன. பேருந்துகள், கடைகள், வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. தாக்குதல்களும் நடந்துள்ளன. பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே போராட்டம் நடத்தியவர்களிடம் இதற்கான இழப்பீட்டுத் தொகையை வசூலிக்க வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE