குடியுரிமை கேட்டு மக்கள் வரிசையில் நிற்க வேண்டுமா? - மத்திய அரசுக்கு பிரியங்கா காந்தி கேள்வி

By செய்திப்பிரிவு

குடியுரிமை கேட்டு மக்கள் வரிசையில் நிற்க வேண்டும் என இந்த அரசு விருமபுகிறது, நாங்கள் இதனை அனுமதிக்க மாட்டோம் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறினார்.

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

இந்தநிலையில் டெல்லியில் இந்தியா கேட் பகுதியில் இன்று இரவு நடந்த போராட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இதுகுறித்து பிரியங்கா காந்தி கூறியதாவது:

‘‘குடியுரிமைச் சட்டத்தால் ஏழை மக்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவர். தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டு வந்தால் நாள் கூலிக்காக வேலை செய்யும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கை. இதனை கண்டித்து தான் அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வருகிறோம். மக்களை பிரிப்பதை ஏற்க முடியாது. குடியுரிமை கேட்டு மக்கள் வரிசையில் நிற்க வேண்டும் என இந்த அரசு விருமபுகிறது. நாங்கள் இதனை அனுமதிக்க மாட்டோம்’’ எனக் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE