ஜார்க்கண்டில் தொங்கு சட்டப்பேரவை; யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது? - கருத்துக் கணிப்பு முடிவுகள்

By செய்திப்பிரிவு

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 5 கட்டங்களாகத் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. 4 கட்டங்களாக நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 16-ம் தேதி வரை 65 தொகுதிகளுக்குத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.

மீதமுள்ள 6 மாவட்டங்களில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 5-வது மற்றும் கடைசிக் கட்டத் தேர்தல் இன்று நடந்தது. இந்தத் தேர்தலில் மொத்தம் 237 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இறுதிகட்டத் தேர்தலில் பாஜக வேட்பாளரும் வேளாண் துறை அமைச்சருமான ரந்திர் சிங், மகளிர் மேம்பாட்டு அமைச்சர் லூயிஸ் மாரண்டி, முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு போரியோ, பார்ஹைத், லிதிபாரா, மகேஷ்புரா, சிகாரிபாரா ஆகிய 5 பதற்றமான தொகுதிகளில் மட்டும் பிற்பகல் 3 மணி வரை நடக்கிறது. மற்ற தொகுதிகளில் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

இறுதிகட்டத் தேர்தலில் சுமார் 70 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 23-ம் தேதி எண்ணப்படுகிறது. இந்தநிலையில் இறுதிக்கட்டத் தேர்தல் முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தையக் கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டன.

அதன்படி ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. மொத்தமுள்ள 81 தொகுதிகளில் பெரும்பான்மை பெற 41 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆனால் அந்த இடங்களை எந்த கூட்டணியும் பிடிக்க முடியாது என்றும், தொங்கு சட்டப்பேரவையே அமையும் எனவும் தேர்தலுக்கு பிந்தையக் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

* சிவோட்டர்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பின்படி காங்கிரஸ் - ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 35 இடங்களிலும், பாஜக 31 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற இடங்களில் இதரக் கட்சிகள் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஐஏஎன்எஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக 29 முதல் 36 இடங்களை கைப்பற்றும் என்றும் 31- 39 தொகுதிகளை பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்கண்கண்ட் மாணவர் பேரவை 5 முதல் 7 இடங்களில் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE