‘‘இது அஜித் பவாரின் முடிவு’’ - சரத் பவார் அறிவிப்பு- மகாராஷ்டிர அரசியலில் மீண்டும் திருப்பம்

பாஜகவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியமைக்கும் முடிவு தேசியவாத காங்கிரஸின் முடிவல்ல என அக்கட்சித் தலைவர் சரத் பவார் அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் தேர்தல் நடந்து முடிந்த பின் முதல்வர் பதவியைப் பிரித்துக் கொள்வதில், சிவசேனா, பாஜக இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால் பாஜகவுடன் 35 ஆண்டுகள் தொடர்ந்த கூட்டணியை சிவசேனா முறித்தது.எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தன. இதற்காக குறைந்த செயல் திட்டத்தைத் தீட்டி ஆட்சி அமைக்கும் பணியில் ஈடுபட்டன. மூன்று கட்சிகளும் சேர்ந்து கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சி அமைக்க ஒப்புக்கொண்ட நிலையில் நேற்று மும்பையில் கூடி ஆலோசனை நடத்தின.

இந்த 3 கட்சிகளும் ஆட்சி அமைக்கும் இறுதிக்கட்ட நிலையில் இருந்தன. இதனால் இன்று 3 கட்சிகளும் சேர்ந்து ஆட்சி அமைக்க இன்று ஆளுநரிடம் கோருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் திடீர் அரசியல் திருப்பமாக பாஜக,தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சி் அமைத்தன. முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் 2-வது முறையாகவும், துணை முதல்வராக அஜித் பவாரும் பதவி ஏற்றனர்.

ஆனால் இந்த முடிவில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடில்லை என அக்கட்சித் தலைவர் சரத் பவார் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சரத் பவார் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘பாஜகவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியமைக்கும் முடிவு தேசியவாத காங்கிரஸின் முடிவல்ல. இது அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவு. அவரின் முடிவை நாங்கள் ஆதரிக்கவில்லை’’ எனக் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE