புனேயில் பலத்த மழை, வெள்ளம்: நீரில் மூழ்கிய வாகனங்கள்; 7 பேர் பலி

புனே
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பலத்த மழையால் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மழை, வெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே மகாராஷ்டிர மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களில் மிக பலத்த மழை பெய்து வருகிறது.

செப்டம்பர் மாத தொடக்கத்தில், அங்கு மீண்டும் பலத்த மழை பெய்தது. மழையால் பல பகுதிகள் நீரில் மூழ்கின. 4 நாட்கள் வரை பாதிக்கப்பட்டிருந்த ரயில், விமானம் மற்றும் சாலை போக்குவரத்து முடங்கியது.

மும்பையின் கொலபாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 70 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. பலத்த மழையால் வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது இந்தநிலையில் மகாராஷ்டிராவில் மீண்டும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.

(படவிளக்கம்: வெள்ளத்தில் வீடு மூழ்கியதால் சேதமடைந்த பொருட்கள்)

அங்கு சாலை முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பல்வேறு நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து பாதிப்படைந்து உள்ளது.

புனே நகரில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இன்று காலை வரை 5 பேர் பலியாகி இருந்தனர். கனமழையை அடுத்து புனேயில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

புனே நகரின் சின்ஹாகட் சாலையில் வெள்ளத்தில் சிக்கிய கார் ஒன்றில் இருந்து ஒருவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.இதேபோன்று புனே நகரின் சஹாகர் நகர் அருகே மற்றொரு உடலை தீயணைப்பு படை அதிகாரிகள் மீட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE