வளர்ச்சியையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் பிரித்துப் பார்க்க வேண்டாம். இந்தியா பொருளாதாரத்தில் வளரும் அதே வேளையில் சுற்றுச்சூழலிலும் மேம்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
சர்வதேச புலிகள் தினம் இன்று கடை பிடிக்கப்படும் நிலையில் 2018-ம் ஆண்டுக்கான புலிகள் கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட்டார் பிரதமர் நரேந்திர் மோடி.
விழாவில் பேசிய அவர், "இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2014-ல் 1400 என்ற அளவில் இருந்த புலிகளின் எண்ணிக்கை 2018-ல் 2967 ஆக அதிகரித்தது. தற்போதைய கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மொத்த 3000 புலிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் புலிகள் வாழ சிறந்த இடமாக இந்திய வனங்கள் இருப்பது உறுதியாகியுள்ளது.
இந்த புதிய கணக்கெடுப்பு இயற்கை ஆர்வலர்களையும் ஏன் ஒவ்வோர் இந்தியரையும் பெருமிதம் கொள்ளச் செய்கிறது. ஒரு புலி இருந்தது (ஏக் தா டைகர்) என்று தொடங்கி புலி உயிருடன் இருக்கிறது (டைகர் ஜிந்தா ஹை) என்பது வரை நீண்டுள்ள கதை அத்துடன் முடிந்துவிடக் கூடாது. (சல்மான் கானின் பிரபல திரைப்படங்களின் பெயர்களை சுட்டிக்காட்டி மோடி பேசினார்)
9 ஆண்டுகளுக்கு முன்னர் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் நடந்த கருத்தரங்கில் உலகளவில் புலிகளில் எண்ணிக்கையை இருமடங்காக அதிகரிக்க 2022 காலக் கெடுவாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், நாம் அந்த இலக்கை 4 ஆண்டுகளுக்கு முன்னதாகவே எட்டியுள்ளோம்" என்றார்.
சர்வதேச புலிகள் தினத்தை ஒட்டி, "புலிகள் சரணாலயத்தின் செயற்திறனும் மதிப்பீடுகளும்" என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை மோடி வெளியிட்டார். மேலும், கவுன்ட்டிங் டைகர்ஸ் "Counting Tigers" என்ற ஆவணப்படத்தின் முன்னோட்டத்தையும் அவர் வெளியிட்டார்.
சமநிலை வேண்டும்..
பிரதமர் மோடி தனது பேச்சின்போது "வளர்ச்சி, மேம்பாட்டிற்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் இடையே ஓர் ஆரோக்கியமான சமநிலை இருக்க வேண்டும். வளர்ச்சியா, சுற்றுச்சூழலா என்ற ஒரு பழைய வாதம் இன்னமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இரு தரப்பையும் ஆதரித்துப் பேசுபவர்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றதுபோலவே வாதிடுகின்றனர்.
நமது அரசாங்கக் கொள்கைகள், நமது பொருளாதாரத் திட்டங்கள் எல்லாவற்றிலுமே நாம் சூழல் பாதுகாப்பு மீதான விவாதப் போக்கை மாற்ற வேண்டிய நிலையில் இருக்கிறோம். இந்தியா பொருளாதாரத்திலும் சுற்றுச்சூழலில் சரிசமமாக முன்னேறும். இந்தியா சாலைகளையும் அமைக்கும் ஆறுகளின் சுத்தத்தையும் பேணும். இந்தியாவில் போக்குவரத்து மேம்படுத்தப்படும் வேளையில் மரங்களும் பாதுகாக்கப்படும்" என்றார்.