5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக இந்தியா உருவாக உ.பி. வழி ஏற்படுத்தும்: அமித் ஷா பெருமிதம்

லக்னோ,

இந்தியா 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக உத்தரப்பிரதேசம் வழி ஏற்படுத்திக் கொடுக்கும்  என்று மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித் ஷா பெருமிதமாகப் பேசினார்.

உத்தரப்பிரதேசம்  மட்டும், ஒரு லட்சம் கோடி அளவுக்கு பொருளாதாரத்துக்கு பங்களிப்பு செய்யும் என நம்புகிறேன் என்று அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.

பல்வேறு தொழில்துறை திட்டங்களுக்கான முதலீடு திரட்டும் பொருளாதார மாநாடு லக்னோவில் இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அமித் ஷா, முதல்வர் யோகி ஆதித்யநாத், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரூ.65 கோடி பொருளாதாரத் திட்டங்களுக்கான அடிக்கல்லை அமித் ஷா நாட்டினார். 

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: 

நாட்டின் பொருளாதாரத்தை அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் முதல் 3 இடங்களுக்குள் கொண்டுவர பிரதமர் மோடி இலக்கு வைத்துள்ளார். 5 லட்சம கோடி அமெரிக்க டாலர் கொண்ட பொருளாதாரமாக நாட்டை மாற்றுவதை இலக்காக வைத்திருக்கிறோம்.

5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக இந்தியா மாறுவதற்கு உத்தரப்பிரதேசம்தான் வழி ஏற்படுத்திக் கொடுக்கும். உத்தரப்பிரதேசத்தில் இருந்து ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்துக்கு வழங்கும் என நம்புகிறேன்.

உத்தரப்பிரதேசத்தின் வளர்ச்சிக்கு மாநில அரசுடன், மத்திய அரசும் சேர்ந்து உறுதிபூண்டுள்ளது என்பதை முதலீட்டாளர்களுக்கு உறுதிதெரிவிக்கிறேன். கண்களை திறந்து வைத்து கனவு காண்பவர்கள், கனவு நனவாகும்வரை தூங்கமாட்டார்கள் என்று பிரதமர் மோடி கூறுவார். 

உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் ஆதித்யநாத் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார். கடந்த இரு ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கில் பல்வேறு மாறுதல்களையும், அதிரடியான நடவடிக்கைகளையும் எடுத்து முதலீட்டாளர்களுக்கு இருந்த தடையை நீக்கியுள்ளார். 

சட்டம் ஒழுங்கு சூழல் மோசமாக இருக்கும் வரை வளர்ச்சிக்கு இடமில்லை. நான் எந்த அரசாங்கத்தையும் பெயர் குறிப்பிட விரும்பவில்லை, ஆனால் இங்குள்ள நிர்வாகம் மிகவும் அரசியலாக்கப்படுகிறது. ஆனால், இப்போதுள்ள பாஜக அரசின் உண்மையான அர்ததம் மக்களுக்கு சேவை செய்யும் அரசு. 

யோகி ஆதித்யநாத் முதல்வராக வருவார் என யாரும் நினைக்கவில்லை. நிர்வாகத்தில் எந்தவிதமான அனுபவமும் இருந்ததில்லை, ஆனால், நம்முடைய நோக்கம் அர்ப்பணிப்பு, விஸ்வாசம், கடின உழைப்புதான். இதறக்காவே பாஜக ஆதித்யநாத்தை முதல்வராக அமரவைக்கும் சரியான முடிவை எடுத்தது, அவரும் அதை சரியென நிரூபித்துள்ளார்
இவ்வாறு அமித் ஷா பேசினார்.

பிடிஐ

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE