டெல்லியில் உள்ள அகில இந்திய வானொலி நிலைய வளாகத்தினுள் போலீஸார் அத்துமீறிய நிலையில் அவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். உச்சகட்ட பாதுகாப்பை மீறி இத்தகைய சம்பவம் நடந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது
இது குறித்து டெல்லியைச் சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி கூறும்போது, "இன்று காலை 3 மணிக்கு, அங்கித் குமார் மற்றும் இன்னொரு போலீஸார் ஆகியோர் குடிபோதையில் காரில் வந்து, பூட்டி இருந்த நுழைவு வாயில் கதவை உடைத்து முன்னேறிய நிலையில், அவர்களை தீவிரவாதிகள் என நினைத்து பாதுகாப்பு பணியில் இருந்த நாகாலாந்து போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில், அங்கித் குமாருக்கு இடது தோள்பட்டையில் தோட்டா பாய்ந்தது. உடனடியாக அவர் ஜெய் பிரகாஷ் நாராயணன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நிலைமை தற்போது சீராக உள்ளது.
ஆகில இந்திய வானொலி நிலையத்தினுள் குடிபோதையில் அத்துமீறிய போலீஸார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், 2 போலீஸாரும் தங்களது காரை குடிபோதையில் ஓட்டிவந்து நிலை தடுமாறி அகில இந்திய வானொலி நிலையத்தின் நுழைவு வாயில் மீது மோதியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.