அபாய அளவை தாண்டியது ஜீலம் நதி: காஷ்மீரில் வெள்ள எச்சரிக்கை

By பிடிஐ

தெற்கு காஷ்மீர் பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் ஜீலம் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அனந்த்நாக், புல்வாமா போன்ற மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே வெள்ளப்பெருக்கினால் நய் பாஸ்தி, டாகியா, ஷம்ஸிபோரா, ஹசன்போரா உள்ளிட்ட கிராமங்கள் வெள்ள நீரால் சூழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரத்திலுருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஜீலம் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

தொடர் கனமழையினால் அனந்த்நாக் மாவட்ட சுற்றுப் பகுதியில் உள்ள ஜீலம் நதியில் வெள்ளப் பெருக்கு அபாய அளவை தாண்டி நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்ற மாவட்டங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், அடுத்த 48 மணி நேரங்களுக்கு இங்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காஷ்மீரில் பெய்த பலத்த மழைக்கு 280 பேர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்தனர். பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான சேதங்கள் ஏற்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE