ஜம்மு காஷ்மீர் மாநில மக்கள் ஜனநாயகக் கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் துப்பாக்கியுடன் இருப்பது போன்ற வீடியோவால் அங்கு சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர் முகமது அஷ்ரப் மிர். எம்.எல்.ஏ.வான இவர் சமீபத்தில் அங்கு நடந்த தேர்தலில் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லாவை சொனாவர் தொகுதியில் தோற்கடித்தார். பதவியில் இருக்கும் முதல்வரைத் தோற்கடித்த மாநிலத்தின் முதல் அரசியல்வாதி என்ற பெருமையை இதன் மூலம் பெற்றிருக்கும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தன்னுடைய வீட்டில் ஏ.கே.47 துப்பாக்கியைக் கொண்டு வானத்தை நோக்கி பலமுறை சுடுவது போன்ற வீடியோ காட்சி ஒன்று வாட்ஸ் அப், உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
ஆனால் இந்த வீடியோ காட்சி பொய்யானது என்றும், தன்னுடைய அரசியல் எதிரிகளால் ஜோடிக்கப்பட்டது என்றும் மிர் இதை மறுத்து வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, "என்னுடைய பாதுகாப்புக்கு இருக் கும் காவலர் ஒருவரின் துப்பாக்கி கீழே விழுந்துவிட்டது. அதனை எடுத்து அவரிடம் கொடுத்தேன். இதுதான் நடந்தது. ஆனால் இதனை வைத்து என் மீது குற்றம் சாட்டுகிறார்கள். என்னுடைய தேர்தல் வெற்றிக்குப் பிறகு சிலரிடையே அதிருப்தி தோன்றி யுள்ளது. அதனுடைய விளைவுதான் இது" என்றார்.