12 பேரைக் கொன்ற வழக்கில் 21 பேருக்கு ஆயுள் தண்டனை

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 12 பேரை கொன்ற வழக்கில் 21 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கர்னூல் மாவட்ட நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

கர்னூல் மாவட்டம், தேவரகொண்டா மண்டலம், கபட்ராலா கிராமத்தில் கடந்த 17.5.2008-ல் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த வெங்கடப்ப நாயுடு மற்றும் அவரது அண்ணன் மகன் சிவசங்கர், அவரது ஆதரவாளர்கள் சிவண்ண கவுடு, சென்ன கேசவுடு, மட்டம் வெங்கோபரய்யா உட்பட 12 பேர் ஒரு காரில் கோடுமூர் எனும் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர்.

கொத்த போதேபாடு பஸ் நிறுத்தம் அருகே அவர்கள் சென்று கொண்டிருந்த போது, காரின் மீது சிலர் வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தினர். மேலும், கத்தி, அரிவாளால் வெட்டினர். இதில் வெங்கடப்ப நாயுடு உட்பட 12 பேர் பலியாயினர்.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மதிலேடி நாயுடு, வாரம் பத்மக்கா, ஊராட்சி மன்ற தலைவர் திவாகர் நாயுடு, யோகேஸ்வர் நாயுடு, புருஷோத்தம் நாயுடு, பிரபாகர் கவுடு, ரமேஷ் உட்பட 46 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அரசியல் பகையால் நடந்த இந்த கொலை வழக்கு மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக கர்னூல் மாவட்டம் ஆதோனி 2வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த வழக்கு விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் 4 பேர் கொல் லப்பட்டனர். சிறையில் அடைக்கப் பட்டிருந்த 3 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் 4 பேர் தலைமறைவாக உள்ளனர்.

இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இதில் 21 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டனர். மேலும் தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. மற்றவர்கள் நிரபராதிகள் எனக் கூறி வழக்கிலிருந்து விடுவிக்கப் பட்டனர். குற்றவாளிகள் அனை வரும் நேற்று கடப்பா சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தீர்ப்பையொட்டி, கபட்ராலா கிராமத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE