பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராக மேம்போக்கான நடவடிக்கைகளை எடுத்து உலக நாடுகளை பாகிஸ்தான் ஏமாற்ற முயற்சி செய்கிறது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மும்பை 26/11 தாக்குதலின் பின்னணியில் மூளையாகச் செயல்பட்ட ஹபீஸ் சயீத், அவரது நெருக்கமான சகாக்கள் 12 பேர் ஆகியோர் மீது பயங்கரவாத நிதியுதவி குற்றச்சாட்டு தொடர்பாக 23 வழக்குகள் தொடரப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் கூறியதையடுத்து மத்திய வெளியுறவு அமைச்சகம் இந்தப் பதிலை அளித்துள்ளது.
பயங்கரவாதக் குழுக்களுக்கு புகலிடம் அளிக்க வேண்டாம் கடும் நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் நெருக்கடி கொடுத்ததையடுத்து ஹபீஸ் சயீத் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் தள்ளப்பட்டது.
இந்நிலையில் மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் புதுடெல்லியில் நிருபர்களிடம் பேசும்போது, “பயங்கரவாதக் குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில் பாகிஸ்தான் உலக நாடுகளை ஏமாற்ற நினைக்கிறது.
அந்நாட்டின் மேம்போக்கான நடவடைக்கைகளைப் பார்த்து நாம் முட்டாள்களாக்கப்பட்டு விடக் கூடாது” என்றார்.