முசாபர்நகரில் கலவரம் பரவாமல் தடுக்க நடவடிக்கை: உச்ச நீதிமன்றத்தில் உ.பி. அரசு பதில்

முசாபர்நகர் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கலவரம் பரவாமல் தடுக்க மாநில அரசு தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் வன்முறையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டு வருவதாகவும் உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.

கலவர பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் மறுசீரமைப்புப் பணி மேற்கொள்ளவும் நிவாரண உதவி வழங்கவும் உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்கள் மீது பிறப்பித்த உத்தரவின் பேரில் இந்த பதிலை மாநில அரசு தாக்கல் செய்தது. முன்னதாக இந்த மனுக்கள் மீது பதில் தெரிவிக்கும்படி மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்விடம் மத்திய அரசு தாக்கல் செய்த பதிலில் கலவர பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மத்திய ஆயுதக் காவல் பிரிவின் 78 கம்பெனி வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு மாநில அரசு அறிவித்த ரூ. 10 லட்சம் நிதி உதவி தவிர, பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ. 2 லட்சம் மத்திய அரசு சார்பி்ல் வழங்கப்படும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

வன்முறை பாதிப்புக்குள்ளான பகுதிகளில் சுமார் 44 பேர் பலியாகி உள்ளனர். 97 பேர் காயம் அடைந்துள்ளனர். கலவரத்தை தூண்டிவிட்டதாக 2462 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என மாநில அரசு தரப்பிலிருந்து தங்களுக்கு அறிக்கை கிடைத்துள்ளது. இதுதான் உண்மை நிலவரம். ஷாம்லி, முசாபர்நகர் ஆகிய பகுதிகளில் 41289 பேர் வீடுகளை விட்டு வெளியேறி வாடுகின்றனர் என்று மத்திய அரசு தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளது.

வகுப்பு கலவரம் ஏற்பட்ட முசாபர்நகர் மாவட்டத்தில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து, கலவரப் பகுதிகளில் தனிமைப்பட்டு தவிக்கும் பொதுமக்கள் பத்திரமான இடங்களுக்கு செல்ல மத்திய அரசின் உதவியுடன் மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என உச்ச நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது.

காயம் அடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ உதவி வழங்க நடவடிக்கை எடுக்கும்படியும் அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கலவர சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என உத்தரப் பிரதேச அரசு தரப்பில் விடுக்கப்பட்ட கோரி்க்கையை நிராகரித்தது. கலவர சம்பவத்தில் மத்திய அரசு தலையிடவேண்டாம் என முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்திருந்ததற்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி வெளியிட்டிருந்தது.

கலவரம் நிகழ்ந்த பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்போர் சங்கங்கள் உள்ளிட்டவை இந்த பொது நல மனுக்களை தாக்கல் செய்துள்ளன. கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

கலவரத்தில் சுமார் 20000 பேரின் வீடுகள் எரிக்கப்பட்டதாகவும் அவர்களுக்கு தற்காலிக உறைவிட வசதி ஏற்படுத்தித் தர உத்தரவிடவேண்டும் எனவும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE