அர்விந்த் கேஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியைத் தொடங்கிய போது, அவருக்கு வெளிநாடுகள் உட்பட பல்வேறு வகைகளில் தினமும் லட்சக்கணக்கான ரூபாய் நிதி உதவி குவிந்தது.
குறிப்பாக இணையதளம் வழியாக நாள் தவறாமல் நிதி உதவி கிடைத்து வந்தது. மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஏற்பட்ட படுதோல்விக்கு பின் நிதியுதவி வெகுவாகக் குறைந்து விட்டது. கடைசியாக, அக்டோபர் 9-ல் ஆம் ஆத்மி கட்சிக்கு எந்த தொகையும் கிடைக்கவில்லை. அக்டோபர் 15-ம் தேதி அதிக தொகையாக ரூ. 52,511 இணையதளம் வழியாக பெறப்பட்டிருந்தது. தீபாவளி பண்டிகைக்கு முன்னிட்டு அதிக நன்கொடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும் வெறும் ரூ. 21,999 மட்டும் ஒன்பது பேரிடமிருந்து கிடைத்தது.
இது குறித்து ‘தி இந்து’விடம் ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ‘இனி டெல்லியில் மீண்டும் சட்டசபை தேர்தல் வரவிருக்கும் நிலையில் தற்போதைய நிதிநிலையை வைத்து பிரச்சாரம் செய்வது மிகவும் கடினம். எனவே, ஒரு புதிய அறிவிப்பு கொடுத்து நிதி வசூல் செய்வது குறித்து கேஜ்ரிவால் யோசனை செய்து வருகிறார்.’ எனத் தெரிவித்தனர்.