வளைகுடா நாடுகளுக்கு பணியாற்றச் செல்லும் இந்திய தொழிலாளர்கள் தொடர்ந்து அங்கு கடினப்பாடுகளைச் சந்தித்து வருகின்றனர். இவர்கள் இந்திய வெளியுறவு அமைச்சக உதவியை நாடியுள்ளனர்.
தற்போதைய பிரச்சினை சமூகவலைத்தளங்கள் மூலம் பஹ்ரைனில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் ஊழியர்கள் பலர் தாங்கள் சம்பளம் என்ற ஒன்றைப்பார்த்து மாதங்கள் ஆகிவிட்டதாக மத்திய அரசை தொடர்பு கொண்ட போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வியாழனன்று மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மனமாவில் உள்ள இந்திய தூதகரத்திடம் இவர்களுக்கு உதவுமாறு அறிவுறுத்தினார்.
இதனையடுத்து பஹ்ரைனில் உள்ள இந்திய தூதரகம் செய்திக்குறிப்பு ஒன்றில், “உள்நாட்டு அரசிடம் இது குறித்து எடுத்துச் சென்றுள்ளோம். எனவே விரைவில் இதற்கு தீர்வு கிட்டும்” என்று கூறியுள்ளது, தெலுங்கானா அரசும் சவுதி அரேபியாவில் சம்பளமின்றி தவிக்கும் 29 இந்தியர்களை விடுவிக்க கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கு சுஷ்மா ஸ்வராஜ் செய்தி அனுப்பி உதவ அறிவுறுத்தியுள்ளார்.
வளைகுடா நாடுகள் கூட்டுறவு கவுன்சில் நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் சொல்லொணா துயரத்தை அனுபவித்து வரும் தொடர்கதையில் இது புது அத்தியாயம் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2016 ஜூலையில் சம்பளமில்லாமல் கையில் உள்ள காசும் வறண்டு போக, உணவின்றி வாடிய 800 இந்தியர்கள் விவகாரத்தில் தலையிட்டு தீர்வு கண்டார்.
இம்முறையும் சுஷ்மா ஸ்வராஜ் பிரச்சினையில் தலையிட்டு உதவ அறிவுறுத்தியுள்ளார்.