நாட்டில் மதசார்பின்மை கொள்கையை பலவீனப்படுத்தும் சக்திகள் விஷயத்தில் விழிப்புடன் செயல்படுவது அவசியம் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எச்சரித்துள்ளார்.
புதிதாக அமைக்கப்பட்ட தேசிய வக்ஃபு மேம்பாட்டு நிறுவனத்தை, பிரதமர் மன்மோகன் சிங் இன்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசும்போது, "சிறு சிறு சம்பவங்களுக்காக நாட்டில் வகுப்பு நல்லிணக்கம்குலைய அனுமதிக்கக் கூடாது. அத்தகைய சம்பவம் தலைதூக்கினால் விருப்பு வெறுப்பின்றி கடுமையாக கையாள வேண்டும்.
நாடாளுமன்றத்தில் வகுப்பு வன்முறை மசோதா விரைவில் தாக்கலாகும். சமூக நேயத்தையும் நாட்டின் பாரம்பரியமிக்க மதச்சார்பின்மையையும் கட்டிக்காப்பதுதான் இந்த மசோதாவின் நோக்கம்.
மதசார்பின்மை கொள்கைகளை பாதுகாப்பதும், சிறுபான்மையினருக்கு சரசம வாய்ப்பு கிடைப்பதை உறுது செய்வதும் அரசின் பொறுப்பாகும்.
தாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்கிற நம்பிக்கை சிறுபான்மையினருக்கு வரவேண்டும். சட்ட ஒழுங்கு நடைமுறை மீதும் அவர்களுக்கு நம்பிக்கை வரவேண்டும்.
இந்தியாவின் மதசார்பின்மை கொள்கையை பலவீனப்படுத்தும் சக்திகள் விஷயத்தில் விழிப்புடன் செயல்படுவது அவசியம்.
நல்லதிட்டங்கள் மட்டுமே போதுமானதாகிவிடாது. அவற்றை சிரத்தையுடன் அமலாக்குவதும் முக்கியமானதாகும்.
சில வேளைகளில் அரசு நலத்திட்டங்களின் பலன் உரியவர்களுக்கு கிடைப்பதில்லை. எனவேதான் இத்தகைய புகார்களை விசாரிப்பதற்கு என தனி அமைப்பு ஏற்படுத்துவது அவசியமானதாகும்" என்றார் சோனியா.