நரேந்திர மோடிக்கு எதிராக, தேர்தலில் மதசார்பற்ற சக்திகள் ஓரணியில் கைகோக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், பாஜகவுக்கு எதிராக மக்கள் வாக்களிப்பார்கள் என்று தாம் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
அமெரிக்கப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் செவ்வாய்க்கிழமை நாடு திரும்பும்போது, விமானத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளரான மோடியை எதிர்கொள்வது குறித்து கேட்டதற்கு, “மோடி போன்ற நபர்களை எதிர்கொள்வதற்கு, அனைத்து மதசார்பற்ற சக்திகளும் ஒன்றிணையும் என்று நம்புகிறேன்” என்றார்.
மேலும், “எனது ஒன்பது ஆண்டு கால ஆட்சியில் 'சில தவறுகள்' நடந்திருக்கலாம். ஆனால், மிகுதியான நன்மைகளைச் செய்திக்கிறோம். அவற்றை மனத்தில் கொண்டு மக்கள் வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.
மூன்றாவது முறையாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியமைக்குமா என்று கேட்டதற்கு, அதை மக்கள்தான் முடிவு செய்வார்கள் என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.