சயனைடு’ கொலையாளிக்கு மேலும் 2 பெண்கள் கொலையில் தொடர்பு

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி 20 பெண்களை பலாத்காரம் செய்து, சயனைடு கொடுத்து கொன்ற வழக்கில் உடற்கல்வி ஆசிரியர் மோகன்குமார் குற்றவாளி என மங்களூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அவருக்கு வழங்கப்படும் தண்டனை குறித்த விவரங்கள் வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என்று நீதிபதி பி.கே.நாயக் அறிவித்தார்.

கர்நாடக மாநிலம் தக்ஷின கன்னட மாவட்டத்தைச் சேர்ந்தவர் மோகன் குமார் (50). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். 2009-ல் பண்டுவலாப் பகுதியை சேர்ந்த அனிதாவை (22) திருமணம் செய்து கொள்வதாக கூறி பலாத்காரம் செய்துள்ளார். கர்ப்பத்தை கலைப்பதற்காக‌ 2009 ஜூன் 17-ல் ஹாசனுக்கு அனிதாவை அழைத்துச் சென்றுள்ளார். அங்குள்ள விடுதியில் தங்கி இருந்த போது அனிதாவிடம் கருக்கலைப்பு மாத்திரை எனக் கூறி சயனைடை கொடுத்து கொலை செய்தார்.

அனிதாவின் உடலைக் கைப் பற்றிய‌ போலீஸார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தினர். அப்போது மங்களூரில் 6 மாதங்க ளுக்கு முன்பு இதே பாணியில் கொலை நடந்திருப்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து கர்நாடகத்தில் பலாத்காரம் செய்து, சயனைடு கொடுத்து கொல்லப்பட்ட இளம்பெண்களின் வழக்குகளை போலீஸார் தூசி தட்டினர். 2005 முதல் 2009 ஜூன் வரை தக்ஷின கன்னட மாவட்டத்தில் மட்டும் இதே பாணியில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

சயனைடு கில்லர்

அந்த சயனைடு கில்லரை போலீஸார் மாநிலம் முழுவதும் தீவிரமாக தேடினர். அப்போது மங்களூர் பஸ் நிலையம் அருகே அதே பாணியில் இன்னொரு பெண்ணை கொல்ல முயன்ற மோகன் குமாரை 2009 அக்டோபரில் போலீஸார் கைது செய்தனர். அவரை விசாரித்தபோது 2005 முதல் 2009 வரை 20 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கருவை கலைப்பதற்காக சயனைடு கொடுத்து கொன்றது தெரிய வந்தது.

இதில்14 பெண்கள் தக்ஷின கன்னட மாவட்டத்தைச் சேர்ந்த வர்கள், மீதமுள்ள‌ 6 பெண்கள் கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்கள் அனைவரையும் திருமணம் செய்வதாக ஆசைக் காட்டி பலாத்காரம் செய்ததாகவும் கருவை கலைப்பதற்காக கருக்கலைப்பு மாத்திரை எனக்கூறி சயனைடு கொடுத்து கொன்று விட்டதாகவும் அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். சயனைடு கொடுத்து கொன்ற மறுகணமே அடுத்த பெண்ணுக்கு வலை வீசியதையும் மோகன் குமார் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

குற்றவாளி என அறிவிப்பு

'சயனைடு கில்லர்' மோகன் குமார் மீதான வழக்கை தக்ஷின கன்னட மாவட்ட‌ போலீஸார், மங்களூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் 4 ஆண்டுகளாக நடத்தி வருகின்ற‌னர். கடந்த‌ செவ்வாய்க்கிழமை நீதிபதி பி.கே.நாயக் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பண்டுவலாப் பகுதியைச் சேர்ந்த அனிதாவை கொலை செய்த வழக்கில் உடற்கல்வி ஆசிரியர் மோகன் குமாரை 'குற்றவாளி' என நீதிபதி பி.கே.நாயக் அறிவித்தார்.

'பலாத்காரம் செய்தல், ஏமாற்றுதல், தடயங்களை அழித்தல், துன்புறுத்தல், கொலை செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் மோகன் குமாருக்கு தண்டனையை உறுதி செய்திருப்பதாகவும் அவர் தெரி வித்தார். தண்டனை விவரங்களை வியாழக்கிழமை அறிவிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வியாழக்கிழமை காலை மங்களூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி பி.கே.நாயக் முன்னிலையில் 'சயனைடு கில்லர்' மோகன் குமாரின் வழக்கு விசாரணைக்கு வந்தது.அப்போது குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மோகன் குமாரை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பத்திரிகையாளர்கள் அவரை படமெடுக்க முடியாதவாறு முகத்தை மூடி அழைத்து வந்தனர். அதேபோல நீதிமன்றத்திற்குள் பத்திரி கையாளர்களை அனுமதிக்கவும் நீதிபதி பி.கே.நாயக் மறுத்துவிட்டார்.

இதைத் தொடர்ந்து பேசிய நீதிபதி, ''சுள்ளியாவை சேர்ந்த லீலாவதி (32), மங்களூரைச் சேர்ந்த சசிகலா (30) ஆகியோரையும் திருமணம் செய்து கொள்வதாக கூறி மோகன்குமார் பலாத்காரம் செய்திருக்கிறார். முந்தைய கொலைகளைப் போலவே சயனைடு கொடுத்து இருவரையும் கொலை செய்தது குற்றவாளி மோகன் குமாரிடம் நடத்திய விசாரணையிலும் குறுக்கு விசாரணையின்போதும் தெரிய வந்துள்ளது. எனவே 3 பெண்களை கொலை செய்த வழக்கில் அவருக்கு வெள்ளிக்கிழமை தண்டனை வழங்கப்படும்'' என்றார்.

தற்போது 'சயனைடு கில்லர்' மோகன் குமார் 3 பெண்களை கொலை செய்ததற்காக மட்டுமே குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளார். மீதம் இருக்கும் 17 பெண்களை கொலைசெய்த வழக்கின் விசாரணை மங்களூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.அந்த வழக்குகளின் தீர்ப்பு இன்னும் சில மாதங்களில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE