மேற்கு வங்கத்தில் சொட்டு மருந்து வழங்கியதில் அலட்சியம்: மருத்துவமனையில் 114 குழந்தைகள் அனுமதி

மேற்கு வங்கத்தில் போலியோ சொட்டு மருந்துக்குப் பதிலாக, மஞ்சள் காமாலைத் தடுப்பு மருந்தை தவறுதலாக அளித்ததால் பாதிக்கப்பட்ட 114 குழந்தைகளுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஹூக்ளியில் உள்ள காதுல் என்ற கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. அப்போது, சுகாதாரப் பணியாளர்கள் தவறுதலாக போலியோ சொட்டு மருந்துக்குப் பதிலாக, மஞ்சள் காமாலைத் தடுப்பு மருந்தை அளித்துவிட்டனர்.

இதைத் தொடர்ந்து, மருந்துகள் மாற்றி வழங்கப்பட்ட 114 குழந்தைகளின் உடல்நிலை பாதிக்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சுகாதாரப் பணியாளர்களின் அலட்சியப் போக்கைக் கண்டித்து, ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் எதிரொலியாக, சுகாதாரப் பணியாளர்கள் 6 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், குழந்தைகளின் உடல்நிலை தற்போது சீராகிவருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE