முஸ்லிம்களுக்கு புகழாரம் சூட்டும் மோடியின் பேச்சு அரசியல் உள்நோக்கம் கொண்டது: மாயாவதி குற்றச்சாட்டு

By பிடிஐ

இந்திய முஸ்லிம்கள் தேசப்பற்று மிக்கவர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியிருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.

பிரதமர் மோடி தனியார் தொலைக்காட்சிக்கு அண்மையில் அளித்த பேட்டியில், இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் தேசப்பற்று மிக்கவர்கள், நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்ய தயங்காதவர்கள் என்று புகழாரம் சூட்டினார்.

பிரதமரின் கருத்தை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியி ருப்பதாவது:

பிரதமர் நரேந்திர மோடியும் பாஜகவினரும் ஆரம்பம் முதலே முஸ்லிம்களுக்கு எதிராக செயல் பட்டு வருகின்றனர். திடீரென பிரதமர் முஸ்லிம்களுக்கு புகழாரம் சூட்டியிருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பது தெளிவாகிறது. அவரது பேச்சுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை.

பாஜகவும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் நாடு முழுவதும் மத வாதத்தைப் பரப்பி வருகிறது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இந்தப் பிரச்சாரம் அதிகரித்துள்ளது.

நாட்டின் உயர் பதவிகளில் இருப்பவர்கள் தங்களது கடமையை செய்வதற்குப் பதிலாக மதவாத சக்திகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றனர்.

முஸ்லிம்கள் தேசப்பற்று மிக்கவர்கள் என்று பிரதமர் மோடி கூறுகிறார். மறுபுறம் அந்தக் கட்சியினர் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டி வருகின்றனர் என்று மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE