உச்ச நீதிமன்ற உத்தரவின் எதிரொலியாக 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கின் விசாரணை அதிகாரியாக ராஜேஸ்வர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
2ஜி அலைக்கற்றை உரிமம் ஒதுக்கீட்டு ஊழல் வழக்கின் விசார ணையை உச்ச நீதிமன்றம் கண் காணித்து வருகிறது. இந்த விசார ணையை கவனித்து வந்த அதிகாரி ராஜேஸ்வர் சிங் அப்பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டுள்ளார் என்று உச்ச நீதிமன்றத்தில் புகார் கூறப் பட்டது. அவரை வேண்டுமென்றே உத்தரப் பிரதேச மாநில பிரிவுக்கு மாற்றிவிட்டனர் என்று மனுதாரர் கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
அவரது நியமனம் தொடர்பாக கடந்த ஆண்டு மத்திய நிர்வாக தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு மேல்முறை யீடு செய்திருப்பதாக நீதிமன்றத் தில் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அவரை அப்பொறுப்பில் இருந்து மாற்றக் கூடாது. 2ஜி வழக்கின் விசாரணை பொறுப்பை அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதன்படி, ராஜேஸ்வர் சிங் மத்திய அமலாக்கப் பிரிவு துணை இயக்குநராகவும் 2ஜி வழக்கின் விசாரணை அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய நிதித் துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது. இதையடுத்து ராஜேஸ்வர் சிங் அப்பதவியில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த முறை 2ஜி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஏர்செல் மேக்சிஸ் விவகாரத்தில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விசாரணை முடிந்து விட்டதாகவும், மேக்சிஸ் நிறுவனத்தில் 74 சதவீத அந்நிய முதலீடு தொடர்பான விசாரணை மட்டும் நிலுவையில் இருப்பதாகவும் மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நாகேஸ்வர ராவ் தெரிவித்திருந்தார். இந்த விசாரணையை ராஜேஸ்வர் சிங் கவனிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.