பாஜக தலைவருடன் ஆலோசனை: சபரிமலை தந்திரியிடம் விளக்கம் கோரியது தேவசம்போர்டு

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் குறிப்பிட்ட வயது பெண்கள் நுழைந்தால் நடையை சாத்தி விடுவதாக கோயில் தந்திரி அறிவித்தபோது, பாஜக மாநில தலைவர் ஸ்ரீதரன் பிள்ளையுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியான நிலையில், இதுபற்றி உரிய விளக்கம் அளிக்குமாறு அவருக்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு உத்தரவிட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் எல்லா வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்குப் பின்னர் கடந்த மாதம் 17-ம் தேதி ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது .அப்போது, பெண்கள் பலர் சபரிமலைக்கு வந்தனர். அவர்களை ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்பினரும் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது.

அப்போது குறிப்பிட்ட வயது பெண்கள் கோயிலுக்குள் வந்தால் நடையை சாத்தி சுத்தி பூஜை செய்யப் போவதாக கோயில் தந்திரி கண்டரரு ராஜீவரு அறிவித்தார். இதுபற்றி கேரள மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை, ‘சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் வந்தால் நடையை அடைக்கப்போவதாக தந்திரி கண்டரரு ராஜீவரு அறிவித்தபோது என்னுடன் கலந்தாலோசித்து தான் அறிவித்தார்’’ என கூறினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வைரலானது. அவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுபற்றி தந்திரியிடம் விளக்கம் கேட்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தேவசம்போர்டு செயலாளர் என். வாசு கூறுகையில் ‘‘பாஜக தலைவருடன் ஆலோசனை நடத்தியது தொடர்பாக சபரிமலை கோயில் தந்திரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், 3 நாட்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டும் என கோரியுள்ளோம்.

தேவசம்போர்டு உறுப்பினர் சங்கரதாஸ், இருமுடி கட்டாமல் சபரிமலை கோயில் பதினெட்டு படிகளில் ஏறிச் சென்ற விவகாரம் ஆதாரமற்ற புகார். தந்திரி மற்றும் மேல்சாந்தியின் வழிகாட்டுதலுடன் தான் அவர் நிர்வாகத்தின் சார்பில் சென்றுள்ளார்’’ என வாசு விளக்கம் அளித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE