அயோத்தியில் ராமருக்குக் கோயில் எழுப்ப வேண்டும் என்று விஎச்பி, சிவசேனா, இந்து அமைப்புகள் வலியுறுத்தி வரும் நிலையில், அந்தக் கோரிக்கையை வலுப்படுத்தும் விதமாக ராமருக்கு உலகிலேயே மிக உயரமான சிலை அமைக்கும் விவரங்களை உத்தரப்பிரதேச அரசு நேற்று இரவு வெளியிட்டது.
221 அடி உயர ராமர் சிலை அயோத்தியில் அமைப்பது என்று நேற்று இரவு முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இதுகுறித்து உ.பி. அரசு செய்தித்தொடர்பாளரும், தகவல்துறையின் கூடுதல் செயலாளருமான அவினேஷ் குமார் நேற்று இரவு கூறுகையில், “ அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் 151மீட்டர் உயரத்தில் சிலை அமைக்கப்படும். அதில் படிக்கட்டுகள் மட்டும் 50 அடி உயரத்தில் இருக்கும். தலையில் வைக்கப்படும் கிரீடம் 20 மீட்டர் உயரத்தில் இருக்கும். ஒட்டுமொத்தமாக ராமர் சிலையின் உயரம் 221 மீட்டர் உயரத்தில் இருக்கும். இந்தச் சிலை முழுவதும் வெண்கலத்தால் உருவாக்கப்படும்.
மேலும், சிலையைச் சுற்றி பக்தர்கள் தங்குவதற்கு விடுதிகள், சரயு நதிக்கரையில் குருகுலம், சிலையைச் சுற்றி பூங்காக்கள் அமைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தியில் ராமருக்குச் சிலை அவர் பிறந்த இடத்தில் வைக்கப்படும். அதற்கான முடிவுகள் விரைவில் எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அயோத்தியில் இன்று விஸ்வ இந்து பரிசத் சார்பில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி தர்ம சபைக் கூட்டம் நடத்தப்படுகிறது. அதேபோல, சிவசேனாக் கட்சியும் சரயு நதிக்கரை ஓரத்தில் தனியாகக்கூட்டம் நடத்துகிறது. இதனால், அயோத்தியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில் உத்தரப்பிரதேச அரசு ராமர் சிலை குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.