உ.பி. இடைத்தேர்தலில் பாஜக எழுச்சி, ‘சரிந்த’ சமாஜ்வாதி... காரணம் என்ன?

By செய்திப்பிரிவு

லக்னோ: உத்தரப் பிரதேச இடைத்தேர்தலில், பாஜக 6 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான ராஷ்டிரிய லோக் தளம் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆனால், சமாஜ்வாதி வெறும் 2 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது. இடைத்தேர்தலைப் பொறுத்தவரை, இந்த முடிவுகள் பாஜகவுக்கு எழுச்சியாகவும், சமாஜ்வாதிக்கு சரிவாகவும் கருதப்படுகிறது.

கடந்த மக்களவைத் தேர்தலில் உ.பி.யின் 80 தொகுதிகளில் பாஜகவுக்கு 33 மட்டுமே கிடைத்தன. இண்டியா கூட்டணியில் சமாஜ்வாதி 37, காங்கிரஸ் 6 தொகுதிகளில் வென்றன. இதனால் உ.பி.யில் ஆளும் பாஜகவுக்கு இறங்கு முகம் தொடங்கிவிட்டதாக பேச்சுக்கள் எழுந்தன. எனவே, 2027 சட்டப்பேரவை தேர்தலுக்கான அரை இறுதிப் போட்டியாக 9 தொகுதிளுக்கான இடைத்தேர்தல் கருதப்பட்டது. இதில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் எதிர்காலமும் இருந்தது.

இந்நிலையில், உ.பி. இடைத்தேர்தலில் சமாஜ்வாதி வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த இரு தொகுதிகளில் கர்ஹாலில், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் எம்எல்ஏவாக இருந்தார். இங்கு சமாஜ்வாதி சார்பில் லாலு யாதவின் மருமகனும், பாஜக சார்பில் முலாயம் சிங்கின் மருமகனும் போட்டியிட்டனர். யாதவர் நிறைந்த இந்தத் தொகுதியில் இது கடும் போட்டியை உருவாக்கியது. இறுதியில் சமாஜ்வாதியின் தேஜ் பிரதாப் யாதவ் வெற்றி பெற்றார்.

மற்றொரு தொகுதியான சிசாமுவில் சமாஜ்வாதி வேட்பாளர் நசீம் சோலங்கி வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் முஸ்லிம்கள் அதிகம் என்பதால் சமாஜ்வாதி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. மற்ற 7 தொகுதிகளில் பாஜக 6, அதன் கூட்டணிக் கட்சியான ராஷ்டிரிய லோக் தளம் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன.

சமாஜ்வாதியின் தோல்விக்கான பின்னணியில் அக்கட்சிக்கு தலித் வாக்குகள் கிடைக்கவில்லை எனக் கருதப்படுகிறது. மக்களவைத் தேர்தலில் தலித் வாக்குகளை சமாஜ்வாதியும் காங்கிரஸும் அதிகம் பெற்றன. இந்தத் தேர்தலில் அவை பாஜக மற்றும் பகுஜன் சமாஜுக்கு சென்றுவிட்டதாக கருதப்படுகிறது.

இடைத்தேர்தலில் தாம் கேட்ட 4 தொகுதிகள் கிடைக்காததால் காங்கிரஸ் போட்டியிடவில்லை. சமாஜ்வாதிக்கு ஆதரவு அளிப்பதாக கூறி ஒதுங்கிவிட்டது. இதனால், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியும் பிரியங்கா வதேராவும் இங்கு பிரச்சாரத்துக்கு வராததால் உ.பி. காங்கிரஸ் தலைவர்களும் சமாஜ்வாதிக்கு பிரச்சாரம் செய்வதில் கவனம் செலுத்தவில்லை.

மக்களவைத் தேர்தலில் அரசியலமைப்பு சட்டத்தை காட்டி இண்டியா கூட்டணி பிரச்சாரம் செய்தது. இடைத்தேர்தலில் அத்தகைய பிரச்சாரம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இதுபோன்ற காரணங்கள் சமாஜ்வாதியின் தோல்விக்கு காரணமாகி விட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

மேலும்