“இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்” - அமித் ஷா

By செய்திப்பிரிவு

தோஹானா (ஹரியானா): எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க நரேந்திர மோடியால் மட்டுமே முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தோஹானா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிய பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, “பாஜக ஆட்சி எப்படி இருக்கிறது என்பதற்கு ஹரியானா சிறந்த உதாரணம். ஹரியானாவில் முன்பு இரண்டு கட்சிகளின் அரசுகள் மாறி மாறி வந்து போவது வழக்கம். ஒரு கட்சி வந்தால் ஊழலும், இன்னொரு கட்சி வந்தால் அராஜகமும் பெருகும். இரண்டிலும் குடும்ப வெறியும் சாதிவெறியும் உச்சத்தில் இருந்தன.

ஹரியானாவில் முதல் முறையாக 2014ல் பாஜக ஆட்சி அமைத்தது. பா.ஜ., அரசு வருவதற்கு முன், லஞ்சம் கொடுக்காத யாருக்கும் அரசு வேலை வழங்கப்படுவது கிடையாது. ஆனால், பாஜக ஆட்சியில் முழு வெளிப்படைத்தன்மையுடன் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் அமெரிக்கா சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “வளர்ச்சிக்குப் பின் இடஒதுக்கீடு தேவையில்லை, வளர்ச்சிக்குப் பிறகு இட ஒதுக்கீட்டை அகற்றுவோம்” என்று கூறியிருந்தார். எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க நரேந்திர மோடியால் மட்டுமே முடியும் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.

அக்னிவீர் திட்டம் பற்றி ராகுல் காந்தி இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறார். நான் சொல்வதில் உறுதியாக இருக்கிறேன். ஹரியானாவின் அக்னிவீரர் யாரும் கைவிடப்பட மாட்டார்கள். இந்திய அரசும், ஹரியானா அரசும் அவர்களுக்கு ஓய்வூதிய வசதியுடன் கூடிய வேலையை வழங்கும். ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர டெல்லியில் இடைத்தரகர்கள் காத்திருக்கிறார்கள். நீங்கள் ஹரியானாவை யாரிடம் கொடுக்க விரும்புகிறீர்கள்? இடைத்தரகர்களிடமா?

சீக்கிய சமூகத்தை அவமரியாதை செய்த வரலாறு காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. உங்கள் ஆட்சியின் போது டெல்லி கலவரத்தில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் சாலைகளில் கொல்லப்பட்டனர். குழந்தைகளும், பெண்களும்கூட விட்டுவைக்கப்படவில்லை. அப்போது, ​​பெரிய மரம் விழுந்தால் பூமி அதிரும் என்று உங்கள் தந்தை (ராஜிவ் காந்தி) கூறினார். ராகுல் காந்தி சீக்கியர்களுக்கு ஏதாவது செய்ய விரும்பினால், தலைப்பாகை அணிந்து, குருத்வாராவுக்குச் சென்று எங்கள் சீக்கிய சகோதரர்களிடம் மன்னிப்பு கேளுங்கள்

காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சியுடன் இணைந்து ராகுல் காந்தி, 370-வது சட்டப்பிரிவை மீண்டும் கொண்டு வந்து அனைத்து பயங்கரவாதிகளையும் விடுவிப்போம் என்று கூறுகிறார். ராகுல் காந்திக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், நீங்கள் சொல்வது ஒருபுறம் இருக்கட்டும், உங்கள் மூன்றாம் தலைமுறை வந்தாலும், 370வது சட்டப்பிரிவு திரும்ப வராது என்பதை நான் திட்டவட்டமாக தெரிவிக்க விரும்புகிறேன். அது தற்போது வரலாறாக மாறியுள்ளது. உங்கள் தாத்தா காலத்தில், 370வது சட்டப்பிரிவு காஷ்மீரில் கேள்விக்குறியாக இருந்தது. அந்த கேள்விக்குறியை நீக்கும் வேலையை நரேந்திர மோடி செய்துவிட்டார்.

10 வருடங்களாக ஹரியானாவின் ஒவ்வொரு கிராமத்தையும் அபிவிருத்தி செய்துள்ளோம். அடுத்த 5 ஆண்டுகளுக்கு மீண்டும் ஆசீர்வாதம் கொடுங்கள். நரேந்திர மோடி, மத்தியில் வந்துவிட்டார். மாநிலத்தில் பாஜகவின் ஆட்சி அமையும். இந்த இரட்டை இன்ஜின் அரசாங்கம் ஹரியானாவை நாட்டின் நம்பர் 1 மாநிலமாக மாற்றும்” என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE