ம.பி, உ.பி.யில் காஸ் சிலிண்டர் வைத்து ராணுவ சிறப்பு ரயிலை கவிழ்க்க சதி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய பிரதேசத்தின் புர்ஹன்புர் மாவட்டத்தின் சக்பதா ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் டெட்டனேட்டர்கள் வைக்கப்பட்டிருந்தன. ரயில் டிரைவர் சுதாரித்து ரயிலை நிறுத்தியதால் ராணுவ சிறப்பு ரயில் தப்பியது.

ஜம்மு காஷ்மீரில் இருந்து கர்நாடகாவுக்கு ராணுவ சிறப்பு ரயில் கடந்த புதன்கிழமை புறப்பட்டது. இந்த ரயில் மத்திய பிரதேசத்தின் புர்ஹன்புர் மாவட்டத்தின் சக்பதா ரயில் நிலையம் அருகே சென்றபோது தண்டவாளத்தில் வெடிச் சத்தம் கேட்டது. இதனால் சுதாரித்த ரயில் டிரைவர் ரயிலை நிறுத்தி அருகில் உள்ள ரயில்நிலைய ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து தீவிரவாத தடுப்பு பிரிவினர், என்ஐஏ, ரயில்வே மற்றும் உள்ளூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

டெட்டனேட்டர்கள் கண்டுபிடிப்பு: அப்போது தண்டவாளத்தில் 10 டெட்டனேட்டர்கள் இருந்தது.ராணுவத்தினர் செல்லும் சிறப்பு ரயிலை கவிழ்ப்பதற்காக இந்த சதி நடத்தப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இது குறித்து தீவிர விசாரணை நடைபெறுகிறது.

உத்தர பிரதேசம் மாநிலத்தின் கான்பூரில் உள்ள பெரம்பூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நேற்று காலை 8.10 மணியளவில் கேஸ் சிலிண்டர் கிடந்தது. இதைப் பார்த்த கான்பூர் - பிரயாக்ராஜ் சரக்கு ரயில் டிரைவர் அவசர பிரேக் போட்டு ரயிலை நிறுத்தினார். அதன்பின் அந்த கேஸ் சிலிண்டர் அகற்றப்பட்டது. அது 5 கிலோ காலி சிலிண்டர் என தெரிந்தது. உத்தர பிரதேசத்தில் கடந்த 8-ம் தேதி அன்று கலிந்தி எக்ஸ்பிரஸ் ரயிலை தடம்புரளச் செய்வதற்காக தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டர் வைக்கப்பட்டிருந்தது. தற்போது 2-வது முறையாக கான்பூர் அருகே தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டர் வைக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE