‘திருப்பதிக்கு இதுவரை நாங்கள் நெய் விநியோகம் செய்ததில்லை’ - அமுல் நிறுவனம் விளக்கம்

By செய்திப்பிரிவு

குஜராத்: திருமலா திருப்பதி தேவஸ்தானத்துக்கு இதுவரை தாங்கள் நெய் விநியோகம் செய்ததில்லை என்று அமுல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: திருமலா திருப்பதி தேவஸ்தானத்துக்கு அமுல் நெய் விநியோகிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான சில பதிவுகளை ஒட்டி இந்த அறிக்கையை வெளியிடுகிறோம். திருமலா திருப்பதி தேவஸ்தானத்துக்கு நாங்கள் இதுவரை நெய் விநியோகம் செய்ததில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

அமுல் நெய் ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் பெற்ற ‘ஸ்டேட் ஆஃப் ஆர்ட்’ தயாரிப்பு வசதிகளின் உதவியுடன் தயாரிக்கப்படுகிறது என்பதையும் தெரிவிக்க விரும்புகிறோம். அமுல் நெய் ஆனது உயர் தர பால் கொழுப்பில் இருந்து தயாரிக்கப்படுகிறது. எங்களது பால் பண்ணைக்கு வரும் பால் அனைத்துமே கடுமையான தரக் கட்டுப்பாடு பரிசோதனைகளைக் கடந்தே வருகின்றன. எஃப்எஸ்எஸ்ஏஐ (FSSAI) எனப்படும் இந்திய உணவுத் தரக் கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பாலின் தரம் இருப்பது கலப்படம் ஏதுமின்றி சுத்தமாக இருப்பது உறுதி செய்யப்படுகிறது.

அமுல் நெய் இந்தியாவில் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த நெய் ‘பிராண்டாக’ உள்ளது. அதனாலேயே, 50 ஆண்டுகளைக் கடந்தும் இந்திய இல்லங்களில் ஓர் இருங்கிணைந்த பகுதியாக அமுல் தயாரிப்புகள் இருக்கிறது.

இந்த அறிக்கையானது அமுல் நிறுவனத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலி பிரச்சாரங்களைத் தடுக்கவே வெளியிடப்படுகிறது.

இது தொடர்பாக வேறேதேனும் கேள்விகள் இருந்தால் கட்டணமில்லா தொலைபேசி சேவை எண்ணான 1800 258 3333- ஐ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்டு சர்ச்சை பின்னணி: ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் நியமனம் செய்யப்பட்ட தேவஸ்தான அறங்காவலர் குழு, மிக குறைந்த விலைக்கு, அதாவது ஒரு கிலோ நெய் ரூ.320 முதல் ரூ.411 என்ற விலையில் 5 நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்துள்ளது. இதில் ஒரு நிறுவனமான திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனம் திருப்பதி தேவஸ்தானத்துக்கு கடந்த 5 ஆண்டுகளாக நெய் அனுப்பி வந்துள்ளது.

இதனால், லட்டு தரம் மிகவும்குறைந்து போனது. இது குறித்து பக்தர்கள் தொடர்ந்து புகார் கூறிவந்தாலும், கடந்த ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் ஆந்திராவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, சந்திரபாபு நாயுடுமுதல்வர் ஆனார். இதைத் தொடர்ந்து,திருப்பதி லட்டு பிரசாதத்தின் தரம் குறித்த புகாரை அவரது பார்வைக்கு தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள் ராவ் கொண்டு சென்றுள்ளார். இதுகுறித்து பரிசோதனை செய்யுமாறு சந்திரபாபு நாயுடு உத்தரவிட்ட நிலையில், குஜராத்தில் உள்ள என்டிடிபி பரிசோதனை மையத்துக்கு கடந்த ஜூலை மாதத்தில் நெய் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆய்வு முடிவில், நெய்யில் கலப்படம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த நெய்யில் மீன் எண்ணெய், மாடு மற்றும் பன்றியின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கு உத்தரவு: இதற்கிடையில், திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலந்த விவகாரம் குறித்த விளக்க அறிக்கையை உடனடியாக வழங்க வேண்டும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE