ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்: தமிழ்நாடு உட்பட 10 மாநிலங்களில் ஆட்சிகள் கலைக்கப்பட வாய்ப்பு

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் ஏற்படும் தாக்கம் பற்றிய விவரங்கள் வெளியாகத் தொடங்கி உள்ளன. இத்திட்டம் 2029-ல் நடைமுறைக்கு வந்தால் அதற்குமுன், உத்தரபிரதேசம், தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட சுமார்10 மாநிலங்களின் சட்டப்பேரவைகளை முன்கூட்டியே கலைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டங்களில் பல்வேறு மசோதாக்கள் மற்றும் சட்டத்திருத்தங்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது. இவை அனைத்தும் சுமூகமாக முடிந்தால் 2029-ல் மக்களவைத் தேர்தலுடன் இந்தியா முழுவதிலும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெறும். அவ்வாறு நடைபெற்றால் ஏற்படும் தாக்கம் குறித்ததகவல்கள் வெளியாகத் தொடங்கி உள்ளன.

கடந்த வருடம் 2023-ல் சுமார் பத்து மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இம்மாநிலங்களில் வரும் 2028-ல் ஆட்சி முடிவுக்கு வந்த பின் அவற்றுக்கு 2029-ல் புதிய திட்டத்தின் கீழ் தேர்தல் நடைபெறும். அதுவரை அந்தமாநிலங்களில் காபந்து அரசுகள் தொடரவும் அல்லது குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படவும் வாய்ப்புள்ளது. இந்தப் பட்டியலில் இமாச்சலபிரதேசம், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், கர்நாடகா, தெலங்கானா, மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, மிசோரம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

அடுத்து வரும் 2026-ல் தமிழ்நாடு, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. 2027-ல் உத்தரபிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தேர்தல் வருகிறது. இந்த இரண்டு ஆண்டுகளிலும் அமையும் ஆட்சிகள் மூன்றுஅல்லது அதற்கும் குறைவான வருடங்கள் மட்டுமே தொடரும் நிலை ஏற்படும்.

டெல்லி சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இங்கு அமையும் ஆட்சி, நான்கு ஆண்டுகளில் முடியும் சூழல் உள்ளது. எனினும், ஒரே நாடு ஒருதேர்தலால் சுமார் 12 மாநிலங்களில் எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை. இவை நடப்பு ஆண்டில்தேர்தல் முடித்த ஒடிசா, ஆந்திரா, சிக்கிம் மற்றும் அருணாச்சலபிரதேசம், தற்போது தேர்தல் நடைபெறும்

ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர், இனி தேர்தல் நடைபெற உள்ள மகராஷ்டிரா, பிஹார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் ஆகும். இந்த 12 மாநிலங்களுக்கு 2029-ம் ஆண்டுஒரே நாடு ஒரே தேர்தலால் பெரியபாதிப்பு இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டப்பேரவை எம்எல்ஏக்கள் மூலமாக மாநிலங்களவை எம்.பி.க்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதனால் மாநிலங்களவையில் 2029-க்கு சற்றுமுன்பாக காலியாகும் இடங்களில் புதிய எம்.பி.க்கள் தேர்வுசெய்யப்படுவது சற்று தாமதமாக வாய்ப்புள்ளது. இந்த ஒரே தேர்தல் முறையால் அரசியல் கட்சிகளுக்கும் பாதிப்புகள் ஏற்படும் எனக் கருதப்படுகிறது. இது, ஆளும் கட்சிகளுக்கா அல்லது எதிர்க்கட்சிகளுக்கா என்பது 2029 நெருங்கும் சமயத்தில் தெரியவரும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE