ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி, ‘ஹைட்ரா’ எனும்அமைப்பை உருவாக்கி அதன் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றி வருகிறது.
இந்நிலையில், நல்கொண்டா மாவட்ட பாரத் ராஷ்டிர சமிதி(பிஆர்எஸ்) கட்டிடம் கடந்த சந்திரசேகர ராவ் ஆட்சியின்போது, சட்டவிரோதமாகக் கட்டப்பட்டது என தற்போதைய சாலை மற்றும்கட்டிட துறை அமைச்சர் கோமிட்டிரெட்டி வெங்கட்ரெட்டி அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றார். இதுகுறித்து பிஆர் எஸ் கட்சியினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் “ஓர் அரசே, அரசு நிலத்தைஆக்கிரமிப்பு செய்து சொந்த கட்சிக்கு கட்டிடம் கட்டி கொண்டால்அது நியாயமல்ல. இது மற்றவர்களுக்கு தவறான முன்னுதாரணமாகி விடும். ஆதலால், அனுமதிஇன்றி கட்டப்பட்ட அக்கட்டிடத்தை நல்கொண்டா நகராட்சி அதிகாரிகள் 15 நாட்களுக்குள் இடிக்க வேண்டும்” என கூறியது.
இதையடுத்து, இனி தாங்கள் நல்கொண்டா நகராட்சியிடம் அனுமதி பெற்று கொள்வதாகவும்; ஆதலால், நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் பிஆர்எஸ் கட்சியின் வழக்கறிஞர் நீதிபதியிடம் கேட்டார். இதை ஏற்க மறுத்த ஹைதராபாத் உயர் நீதிமன்றம் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.