கேஜ்ரிவாலை சந்திக்கிறார் மணீஷ் சிசோடியா: அடுத்த டெல்லி முதல்வர் பற்றி ஆலோசிக்க திட்டம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி முன்னாள் துணை முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மணீஷ் சிசோடியா, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை இன்று (திங்கள்) சந்திக்க உள்ளார்.

இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், “கேஜ்ரிவால் மற்றும் சிசோடியா இன்று சந்தித்துப் பேசுவார்கள். முதல்வர் பதவியில் இருந்து விலகப் போவதாக கேஜ்ரிவால் அறிவித்த பிறகு நடக்கும் முதல் சந்திப்பு இது. இந்த சந்திப்பின்போது, டெல்லியின் அடுத்த முதல்வர் குறித்து இருவரும் விவாதிப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

டெல்லி சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள முதல்வரின் அதிகாரபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. டெல்லியின் அடுத்த முதல்வராக சுனிதா கேஜ்ரிவால், டெல்லி அமைச்சர்கள் அதிஷி, கோபால் ராய், கைலாஷ் கெலாட் ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என ஊகங்கள் வெளியாகி உள்ளன.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கடந்த மார்ச் 21-ம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். பல்வேறு திருப்பங்களுக்கு பிறகு கடந்த 13-ம் தேதி அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். எனினும் முதல்வர் அலுவலகத்துக்கு செல்லக்கூடாது. ஆளுநரின் ஒப்புதல் இன்றி கோப்புகளில் கையெழுத்திடக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

சிறையில் இருந்து விடுதலையான பிறகு டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி அலுவலகத்துக்கு கேஜ்ரிவால் நேற்று சென்றார். அங்கு கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், “அடுத்த 2 நாட்களில் டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன். ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் புதிய முதல்வரை தேர்வு செய்வார்கள். நான் நேர்மையற்றவன், ஊழல்வாதி என்று பாஜக குற்றம் சாட்டுகிறது. எனவே அடுத்த சட்டப்பேரவைத் தேர்தல் வரை நான் முதல்வர் பதவியில் அமர மாட்டேன்.

டெல்லியின் ஒவ்வொரு தெரு, ஒவ்வொரு வீட்டுக்கும் செல்வேன். மக்கள் எனக்கு வாக்களித்து மீண்டும் முதல்வராக்கிய பிறகே முதல்வர் இருக்கையில் அமர்வேன். ஆம் ஆத்மியை உடைக்க பாஜக முயற்சி செய்கிறது. பொய் வழக்குகளை பதிவு செய்து எங்கள் கட்சி தலைவர்கள் சிறையில் தள்ளப்படுகின்றனர். துணைநிலை ஆளுநருக்கு கடிதம் எழுதக்கூடாது என்று மிரட்டினர். எனது குடும்பத்தினரை சந்திக்கக்கூடாது என்று மிரட்டினர்.

சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக தோல்வி அடைந்தால், மாநில முதல்வர்கள் மீது வழக்கு தொடரப்படுகிறது. அந்த வகையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. எதிர்க்கட்சி முதல்வர்களிடம் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். உங்களை சிறையில் தள்ளினாலும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம். அரசமைப்பு சாசனம், ஜனநாயகத்தை காப்பாற்ற போராடுங்கள்.” என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE