2 நாட்களில் பதவியை ராஜினாமா செய்வேன்: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி முதல்வர் பதவியை 2 நாட்களில் ராஜினாமா செய்வேன் என்று அர்விந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

கடந்த 2012-ம் ஆண்டில் ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்டது. கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பரில் அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அர்விந்த் கேஜ்ரிவால் டெல்லி முதல்வராக பதவியேற்றார். 49 நாட்களில் அவர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் 2015-ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று கேஜ்ரிவால் மீண்டும் முதல்வராக பதவியேற்றார். கடந்த 2020-ம் ஆண்டு தேர்தலிலும் ஆம் ஆத்மி வெற்றி பெற்று 3-வது முறையாக கேஜ்ரிவால் முதல்வரானார். இந்த சூழலில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கடந்த மார்ச் 21-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். பல்வேறு திருப்பங்களுக்கு பிறகு கடந்த 13-ம் தேதி கேஜ்ரிவால் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். எனினும் முதல்வர் அலுவலகத்துக்கு செல்லக்கூடாது. ஆளுநரின் ஒப்புதல் இன்றி கோப்புகளில் கையெழுத்திடக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

சிறையில் இருந்து விடுதலையான பிறகு டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி அலுவலகத்துக்கு கேஜ்ரிவால் நேற்று சென்றார். அங்கு கட்சி நிர்வாகிகள் மத்தியில் அவர் பேசியதாவது: அடுத்த 2 நாட்களில் டெல்லி முதல்வர்பதவியை ராஜினாமா செய்வேன். ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் புதிய முதல்வரை தேர்வு செய்வார்கள். நான் நேர்மையற்றவன், ஊழல்வாதி என்று பாஜக குற்றம் சாட்டுகிறது. எனவேஅடுத்த சட்டப்பேரவைத் தேர்தல் வரை நான் முதல்வர் பதவியில் அமர மாட்டேன். டெல்லியின் ஒவ்வொரு தெரு, ஒவ்வொரு வீட்டுக்கும் செல்வேன். மக்கள் எனக்கு வாக்களித்து மீண்டும் முதல்வராக்கிய பிறகே முதல்வர் இருக்கையில் அமர்வேன். ஆம் ஆத்மியை உடைக்க பாஜக முயற்சி செய்கிறது. பொய் வழக்குகளை பதிவு செய்து எங்கள் கட்சி தலைவர்கள் சிறையில் தள்ளப்படுகின்றனர். துணைநிலை ஆளுநருக்கு கடிதம் எழுதக்கூடாதுஎன்று மிரட்டினர். எனது குடும்பத்தினரைசந்திக்கக்கூடாது என்று மிரட்டினர்.

சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜகதோல்வி அடைந்தால், மாநில முதல்வர்கள் மீது வழக்கு தொடரப்படுகிறது. அந்த வகையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, கேரள முதல்வர் பினராயிவிஜயன், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் மீது வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. எதிர்க்கட்சி முதல்வர்களிடம் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். உங்களை சிறையில் தள்ளினாலும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம். அரசமைப்பு சாசனம், ஜனநாயகத்தை காப்பாற்ற போராடுங்கள். இவ்வாறு அர்விந்த் கேஜ்ரிவால் பேசினார்.

புதிய முதல்வர் யார்? - அடுத்த 5 மாதங்களில் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதை கருத்தில் கொண்டே முதல்வர் கேஜ்ரிவால் ராஜினாமா முடிவை அறிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா முதல்வர் பதவியை ஏற்கமாட்டேன் என்று அறிவித்துள்ளார். எனவே கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா புதிய முதல்வராக பதவியேற்கக்கூடும். அவர் மறுத்தால், ஆதிஷி, கைலாஷ் கெலாட், கோபால் ராய், சவுரப் பரத்வாஜ் ஆகியோரில் ஒருவர் டெல்லி முதல்வராக பதவியேற்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாஜக விமர்சனம்: பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கூறியதாவது: அரவிந்த் கேஜ்ரிவாலின் நேர்மைகேள்விக்குறியாகி மக்களை ஏமாற்றஅவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இது அரசியல் நாடகம். கடந்த காலத்தில் மன்மோகன் சிங்கை பிரதமராக்கிய சோனியா, அவரை கைப்பாவை போன்றுஇயக்கினார். இதேபாணியை கேஜ்ரிவாலும் பின்பற்றுகிறார். இவ்வாறு பிரதீப் பண்டாரி தெரிவித்தார். டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா கூறும்போது, “கடந்த மக்களவைத் தேர்தலின்போதே மக்கள் தங்கள்தீர்ப்பை அளித்து விட்டனர். டெல்லியில்ஆம் ஆத்மிக்கு ஓரிடம்கூட கிடைக்கவில்லை. வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் அந்த கட்சிக்கு எதிராக மக்கள் வாக்களிப்பார்கள்" என்று தெரிவித்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் சந்தீப் தீட்சித் கூறும்போது, “கேஜ்ரிவாலை ஊழல்வாதியாகவே உச்ச நீதிமன்றம் பாவிக்கிறது. அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே வலியுறுத்தினோம். இப்போது அவர் அரசியல் நாடகமாடுகிறார்" என்று குற்றம் சாட்டினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE