வயலாறு: ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள மாநிலம் வயலாறில் நேற்றுமுன்தினம் உள்ளூர் அமைப்பு ஒன்று சாப்பாட்டு போட்டியை நடத்தியது. அந்தப் போட்டியில் கலந்துகொண்ட 49 வயதான சுரேஷ், போட்டியில் வெல்வதற்காக இட்லியை வேகமாக சாப்பிட்டார். அப்போது இட்லி அவரது தொண்டைப் பகுதியை அடைத்த நிலையில் அவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.
இது குறித்து சம்பவத்தை நேரில் பார்த்த நபர் கூறுகையில், “சட்னி, சாம்பார் இல்லாமல் வெறும் இட்லியை சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டது. இந்தப்போட்டியில் நான்கு பேர் கலந்துகொண்டனர். 60 பார்வையாளர்கள் இருந்தோம். போட்டியாளர்கள் ஒவ்வொரு இட்லியாக வேகமாக சாப்பிட ஆரம்பித்தனர். அப்போது சுரேஷ் என்ற போட்டியாளர் ஒரே நேரத்தில் மூன்று இட்லியை வாயில் திணித்து சாப்பிட்டார். அப்போது அவரது தொண்டை அடைத்தது. ஒரு நிமிடத்துக்குள்ளாக அவர் மூச்சுத் திணறி கீழே விழுந்தார். நாங்கள் அவரை அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தோம். அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்” என்றார். லாரி ஓட்டுநரான சுரேஷ் தனது அம்மாவுடன் வசித்து வந்தார். அவரது உயிரிழப்புத் தொடர்பாக வயலாறு காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.