மருத்துவர்களுக்கு தனி அடையாள எண்: என்எம்சி போர்ட்டலில் பதிவு தொடக்கம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அனைத்து மருத்துவர்களுக்கும் ஆதாரைப் போல தனிப்பட்ட எண்ணுடன் கூடிய அடையாள அட்டைகளை வழங்கும் நோக்கில் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி)அதற்கான பதிவை தொடங்கியுள்ளது.

தேசிய மருத்துவ பதிவேடு (என்எம்ஆர்) போர்ட்டலை மத்தியசுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி அறிமுகப்படுத்தினார். அப்போது அவர் கூறுகையில், “தேசிய சுகாதார பதிவேடு திட்டம் என்பது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகும். இது, டிஜிட்டல் ஹெல்த்கேர் சூழலை வலுப்படுத்தும் என்பதுடன் இந்திய மக்களுக்கு தரமான மருத்துவ சேவையை உறுதி செய்யும்’’ என்றார்.

இந்நிலையில், அனைத்துமருத்துவர்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வகையில்அவர்களுக்கு தனித்துவ எண்ணுடன் அடையாள அட்டை வழங்குவதற்கான பதிவை என்எம்சி தொடங்கியுள்ளது. இந்த போர்ட்டலில் மருத்துவர்கள் தங்களது பதிவு செயல்முறையை தொடங்குவதற்கு அவர்களின் ஆதார், எம்பிபிஎஸ் பட்டப்படிப்பின் டிஜிட்டல் நகல் மற்றும் மருத்துவர் முதல் முறையாக பதிவு செய்த மாநில மருத்துவ கவுன்சில், இந்திய மருத்துவ கவுன்சிலின் பதிவுச் சான்றிதழ் ஆகியவை கட்டாயமாகும்.

மேலும், தகுதிச் சான்றுகள் இருந்தால் கூடுதல் விவரங்களையும் போர்ட்டலில் உள்ளீடு செய்யலாம். இதைத் தொடர்ந்து விண்ணப்பம் தானாகவே மாநில மருத்துவ கவுன்சிலுக்கு (எஸ்எம்சி) சரிபார்ப்புக்காக சென்றுவிடும். எஸ்எம்சி பின்னர் அந்த விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட கல்லூரி அல்லது நிறுவனத்துக்கு கூடுதல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கும். வெற்றிகரமான சரிபார்ப்புக்குப் பிறகு விண்ணப்பம் திருப்பி என்எம்சி-க்கு அனுப்பி வைக்கப்படும். என்எம்சி அனைத்து விவரங்களையும் மீண்டும் ஒருமுறை ஆய்வு செய்த பிறகு மருத்துவருக்கு தனிப்பட்ட என்எம்ஆர் ஐடி வழங் கப்படும்.

இந்த போர்ட்டல் மூலம், எஸ்எம்சி மற்றும் கல்வி நிறுவனங்கள் உட்பட அனைத்து மருத்துவ அமைப்புகளும் ஒரே தளத்தில் உள்நுழைந்து விண்ணப்பங்களை சரிபார்க்க முடியும். இந்திய மருத்துவப் பதிவேட்டில் (ஐஎம்ஆர்) பதிவு செய்யப்பட்ட அனைத்து எம்பிபிஎஸ்மருத்துவர்களும் மீண்டும் என்எம்ஆரில் பதிவு செய்ய வேண்டும் என்று என்எம்சி சமீபத்தில் சுற்றறிக்கை அனுப்பியது குறிப்பிடத்ததக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE