விநாயகர் சிலை கரைப்பின்போது உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: குஜராத்தின் காந்திநகர் மாவட்டம், தேகாம் பகுதியில் நேற்று முன்தினம் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. இதன் பிறகு 9 பக்தர்கள் அங்குள்ள ஆற்றில் குளித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக 8 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். நீச்சல் வீரர்கள் பல மணி நேரம் ஆற்றில் தேடி 8 பேரின் உடல்களை மீட்டனர்.

உயிரிழந்த 8 பேரும் நெருங்கிய உறவினர்கள் என்று போலீஸார் தெரிவித்தனர். ஆற்றில் மூழ்கி இறந்த ஜஸ்பால் என்பவரின் மனைவி 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். சிராக் என்பவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. உயிரிழந்த 8 பேரும் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

குஜராத்தின் தேகாம் பகுதியில் 8 பேர் உயிரிழந்த தகவல் அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன். உயிரிழந்தவர் களின் குடும்பங்களுக்கு பிரதமரின்தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE