‘பிரதமர் இல்லத்தில் புதிய உறுப்பினர்’ - கன்றுக்கு முத்தமிட்டு கொஞ்சும் மோடி!

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரதமர் மோடியின் அதிகாரபூர்வ இல்லமான கல்யாண் மார்க்-கில் பச்சிளம் பசுங்கன்றுடன் கொஞ்சி முத்தமிட்டு விளையாடும் படங்களை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தனது இல்லத்தில் உள்ள பசு ஈன்ற கன்றுக்குட்டிக்கு தீபஜோதி என்று பிரதமர் மோடி பெயர் சூட்டியுள்ளார்.

தனது இல்லத்தின் புதிய உறுப்பினரின் வருகை குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கதில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இந்தியில் பதிவெழுதியுள்ளார். அதில், “நமது சாஸ்திரங்களில் காவ்: சர்வசுகா பிரதா என்று சொல்லப்பட்டுள்ளது. கல்யாண் மார்க்-கில் உள்ள வீட்டுக்கு புதிய உறுப்பினர் ஒருவரின் நல்வருகை நிகழ்ந்துள்ளது. இங்குள்ள பசு கன்று ஒன்றை ஈன்றுள்ளது. அதன் நெற்றியில் தீபக் குறியீடு உள்ளது. அதனால் அதற்கு நான் தீபஜோதி என்று பெயரிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

வீடியோவில், தத்தித் தத்தி நடந்து வரும் ’தீபஜோதி’ தடுமாறி விடாமல் அழைத்துச் செல்லும் பிரதமர் மோடி, பச்சிளம் கன்றை தனது பூஜை அறைக்கு அழைத்துச் சென்று மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி மடியில் வைத்துக் கொஞ்சி, முன்னெற்றி தடவியபடியே முத்தமிட்டு, அதை தோட்டத்துக்கு அழைத்து சென்று, தோளில் தூக்கித் தாலாட்டி என கன்றுடன் கொஞ்சியபடி நேரம் செலவிடும் மான்டேஜ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.அதேபோல், கன்றுடன் இருக்கும் புகைப்படங்களையும் தனியாக வெளிட்டுள்ளார். அதில், "7, லோக் கல்யாண் மார்க்-கில் ஒரு புதிய உறுப்பினர். தீபஜோதி உண்மையில் அபிமானத்துக்குரியதே” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE