உள்நாடு, வெளிநாடு பயணங்களை திட்டமிடும் பிரதமர் மணிப்பூரை கவனமாக தவிர்க்கிறார்: காங்கிரஸ்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மணிப்பூர் நிலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சி, "வெளிநாடுகள், உள்நாட்டுப் பயணங்களை திட்டமிடும் பிரதமர் கவனமாக மணிப்பூரைத் தவிர்த்து வருகிறார்" என்று சாடியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த 2023ம் ஆண்டு மே 3-ம் தேதி மணிப்பூர் பற்றி எரியத் தொடங்கியது. 2023, ஜூன் 3-ம் தேதி கலவரம் மற்றும் வன்முறைக்கான காரணம் மற்றும் பரவல் குறித்து விசாரணை நடத்த மூன்று நபர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. அந்த குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க ஆறு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டது. அந்தக் குழு எந்த அறிக்கையையும் சமர்ப்பிக்கவில்லை. அதற்கான கால அவகாசம் 2024 நவம்பர் 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மணிப்பூர் மக்களின் துன்பமும், துயரமும் இன்னும் தொடர்கிறது. நமது பிரதமர் நாட்டின் பிறபகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் பயணம் செல்வதற்கு திட்டமிட்டு வருகிறார். ஆனால் சிக்கலுக்குள் இருக்கும் மாநிலத்துக்குச் செல்வதை கவனமுடன் தவிர்த்து வருகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதம் முதல் மணிப்பூரில் சுமார் 220-க்கும் அதிகமானோர் உயிரிழக்கவும், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழக்கவும் காரணமான கலவரம் குறித்து விசாரணை நடத்தி வரும் குழுவுக்கான கால அவகாசத்தை நவ.20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அவகாச நீட்டிப்பு உத்தரவுக்கு அடுத்த நாள் ஜெய்ராம் ரமேஷ் இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மணிப்பூர் கலவரத்துக்கான காரணங்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்திட குவாஹாட்டி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி அஜய் லம்பா தலைமையில் மூன்று பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவில் அவருடன், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஹிமான்சு சேகர் தாஸ், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி, அலோக் பிரபாகர் அடங்கியுள்ளனர்.

இந்தக் குழு 2023 மே,3-ம் தேதி முதல் மணிப்பூரில் பல்வேறு சமூகத்தவரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலுக்கான காரணங்கள், பரவல் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE