கர்நாடகாவின் மாண்டியாவில் விநாயகர் ஊர்வலத்தில் மோதல்: 144 தடை உத்தரவு நீட்டிப்பு

By இரா.வினோத்


பெங்களூரு: கர்நாடகாவில் மண்டியாவில் விநாயகர் ஊர்வலத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து காவல் ஆய்வாளர் உட்பட 3 அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் மண்டியாவில் உள்ள நாகமங்களாவில் கடந்த11-ம் தேதி நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக்கொண்டதால் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த‌னர். 10-க்கும் மேற்பட்ட கடைகளும், 7 இரு சக்கர வாகனங்களும் தீ வைத்து கொளுத்தப்பட்டன. அங்கு மர்ம நபர்கள் பெட்ரோல் வெடி குண்டை வீசியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து கலவரத்தில் ஈடுபட்ட 55 பேரை போலீஸார் கைது செய்து விசா ரித்து வருகின்றனர்.

போலீஸார் குவிப்பு: இந்நிலையில் மண்டியா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திம்மையா விடுத்த அறிக்கையில், “நாகமங்களாவில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த‌ப்பட்டனர். அங்கு பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு 14-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வன்முறையை தடுக்க தவறிய நாகமங்களா காவல் ஆய்வாளர் அலோக் குமார் உள்ளிட்ட 3 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்” என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE