புதுடெல்லி: டெல்லியில் மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து, டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அர்விந்த் கேஜ்ரிவால் பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த மார்ச் 21-ம்தேதி கைது செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து கடந்த ஜூன் 26-ம் தேதி சிபிஐ-யும் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தது. இந்த கைதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், தனக்கு ஜாமீன் கோரியும் மனு தாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் ஏற்கெனவே நடைபெற்று முடிந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வு அர்விந்த் கேஜ்ரிவால் மனு மீதான தீர்ப்பை செப்டம்பர் 5-ம் தேதியன்று ஒத்திவைத்தது. இந்த நிலையில், உச்ச நீதிமன்ற வலைதளத்தில் செப்டம்பர் 13-ம்தேதி விசாரணைக்கு வரும் வழக்குகளின் பட்டியலில் அர்விந்த் கேஜ்ரிவால் தாக்கல் செய்துள்ள மனுவும் இடம்பெற்றுள்ளது. அதில், அர்விந்த் கேஜ்ரிவால் சிபிஐ-க்கு எதிராக தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தனக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதை எதிர்த்தும், சிபிஐ கைதுக்கு எதிராகவும் இரண்டு தனித்தனி மனுக்களை கேஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.