புதுடெல்லி: உத்தர பிரதேச மதரஸா கல்வி வாரியம் அரசமைப்புக்கு எதிரானது என்று கூறி அங்குள்ள மதரஸாக்களில் பயிலும் மாணவர்களை வழக்கமான பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல்மாதம் தடை விதித்தது. இந்நிலையில் இந்த வழக்குத் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அதில், “மதரஸாக்களில் பயிலும் மாணவர்களுக்கு முறையான கல்வி வழங்கப்படுவதில்லை. அங்கு முறையான பாடத்திட்டங்கள் இல்லை. இதனால், அங்கு பயிலும் குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வி கிடைப்பதில்லை. இது தவிர்த்து, ஆரோக்கியமான கல்விச் சூழலும், வளர்ச்சிவாய்ப்புகளும் அங்கு இருப்பதில்லை. பிஹார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் மதரஸாக்களில் முஸ்லிம் அல்லாத மாணவர்களுக்கும் இஸ்லாமியக் கல்வி வழங்கப்படுகிறது. இது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும். மதரஸாக்களில் தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை. பெரும்பான்மையான மதரஸாக்கள் தங்கள் நிர்வாகம் வழியாகவே ஆசிரியர்களை நியமிக்கின்றன. அந்த ஆசிரியர்கள் உரிய கல்வித் தகுதியைக் கொண்டிருப்பதில்லை. நிதி பெறுவதிலும் வெளிப்படைத்தன்மை இல்லை” என்று குறிப்பிட்டுள்ளது.